முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்க எடுத்த நடவடிக்கை பழிவாங்குதல் அல்ல: அமைச்சர் ஆனந்த விஜேபால
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவும் இந்த சட்டத்தின் கீழ் சிறப்புரிமைகளைப் பெற்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்க எடுத்த நடவடிக்கை அரசியல் கலாசாரத்தின் மாற்றமே தவிர பழிவாங்குதல் அல்ல. இதனால் யாருக்காவது பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்பட்டால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட குழுவுக்கு தெரிவித்து தேவையான பாதுகாப்பை பெற்றுக் கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 10-09-2025 அன்று இடம் பெற்ற ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றுவது எவர் மீதான பழிவாங்கலும் அல்ல.அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக நாட்டு மக்களுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை வேலைத் திட்டத்திற்கு இணங்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் ஒரு அம்சமாகவே இதனைக் குறிப்பிட முடியும். அதிகாரங்களில் உள்ள சிலரும் தமது சிறப்புரிமைகளைப் பெற்று வாழ்கின்றனர். அந்த அரசியல் கலாசாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இருந்த அரசியல் கலாசாரத்தை நாம் நன்கு அறிவோம். அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ வீடு, வாகன அனுமதிப்பத்திரம், அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் எரிபொருள் கொடுப்பனவு ஆகியவற்றை நாம் தற்போது குறைத்துள்ளோம்.
இந்த நிலையில் ஓய்வு பெற்றுள்ள ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டத்தின் மூலம் சில சிறப்புரிமைகள் இழக்கப்படுகின்றன. இது அரசியல் கலாசாரத்தின் மாற்றம் என்பதே தவிர பழிவாங்குதல் அல்ல.
இந்த சட்டம் எந்த விதத்திலும் பாதுகாப்போடு தொடர்புபட்டதல்ல. எவருக்காவது பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்பட்டால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட குழுவுக்கு விடயங்களை தெரிவித்து தேவையான பாதுகாப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
நாட்டில் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் நீண்ட காலம் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யாவிட்டால் அவற்றை சில மட்டுப்படுத்தலின் கீழ் வழங்குவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம். பாதுகாப்புக்கு மேல்திகமாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பணிக்குழு வழங்கப்பட்டிருந்தது. சில சிறப்புரிமைகள் மட்டுப்படுத்தலின்றி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவும் இந்த சட்டத்தின் கீழ் சிறப்புரிமைகளைப் பெற்றுள்ளார். அவற்றுக்காக பாரியளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. அவருக்கு மேற்படி சட்டத்தின் கீழ் கடந்த வருடத்திலும் பாரிய நிதி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு 26 லட்சத்து 85ஆயிரத்து 660 ரூபாவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஒரு கோடியே 16 இலட்சத்து 66 ஆயிரத்து 348 ரூபாவும் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு 5 கோடியே 46 லட்சத்து 52 ஆயிரத்து 990 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு கோடியே 50 லட்சத்து 72 ஆயிரத்து 450 ரூபாவும் கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு ஒரு கோடியே 2 லட்சத்து 22 ஆயிரத்து 88 ரூபாவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 34 இலட்சத்து 92 ஆயிரத்து 39 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு 9 கோடியே 85 லட்சத்து 88 ஆயிரத்து 39 ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார்.





