புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள மகாவலி கே வலயத்தின் நோக்கம் என்ன? சாணக்கியன் எம்.பி.கேள்வி
நில ஒதுக்கீட்டு கொள்கைகள் காரணமாக மக்கள் அமைப்பில் மாற்றம் அல்லது உள்ளுர் தேசிய இனங்களின் இடம்பெயர்வு மற்றும் புறக்கணிப்பு ஏற்படாமல் இருக்க அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்று கேள்விகளை முன்வைத்தார்.
மகாவலி 'கே' வலயம் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இந்த திட்டம் எங்கே உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பயன்படுத்தப்படவிருக்கின்ற காணியின் விஸ்தீரணம் எவ்வளவு? இந்த 'கே' வலயத்திட்டத்தின் நோக்கம் என்ன? மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய இன விகிதத்தின் பிரகாரம் நிலப் பகிர்வு மற்றும் வட, கிழக்கு மாகாண மக்களின் குடிப்பரம்பல் மீது தாக்கம் ஏற்படும் அச்சுறுத்தல் காணப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 19-02-2026 அன்று நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் மகாவலி அபிவிருத்தித் திட்டம் மற்றும் கிவுல் ஓயா திட்டம் குறித்து காணி மற்றும் விவசாயத்துறை அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:
பல தசாப்தங்களாக, மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நில ஒதுக்கீடு மற்றும் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட உள்ளுர் சமூகங்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுநிருபத்தின் கீழ் அரசகாணி ஒதுக்கீடு செய்யும் போது தேசிய இன விகிதசாரம் பேணப்படவில்லை.அதனால் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் இனவிகிதாசாரப் பரம்பலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்இ சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடைபெறுகின்றது எனும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அண்மைக் காலங்களில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இடம்பெறும் கிவுல் ஓயா திட்டத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் மயிலத்தமடு மற்றும் மாதவனை போன்ற மேய்ச்சல் தரைநிலங்களின் பிரச்சினைகள், குடியேற்றக் கொள்கை, மற்றும் நீர்ப்பாசன உள்ளிட்ட வளங்களின் சமமான அணுகல் குறித்து பொதுமக்களின் கவலை அதிகரித்துள்ளது. பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர விடயமாக இந்த பிரச்சினைகள் காணப்படுகின்றன.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், அட்டவணை 9 நிரல் 'ஐ' பின்னிணைப்பு 18 உறுப்புரை 2.5இன் பிரகாரம் அரச நிலங்களைப் பகிர்ந்தளிக்கும் போது தேசியஇன விகிதம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தேசியஇன விகிதத்தின் அடிப்படையில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட நிலங்களின் அளவை, இன ரீதியான விபரங்களுடன் தெரிவிக்கவும்.
மகாவலி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் வழங்கப்பட்டுள்ள நிலத்தின் மொத்த அளவு (ஏக்கரில்) எவ்வளவு? மேலும், தேசியஇன ரீதியாக பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
வடக்கு மாகாணத்தில் கிவுல் ஓயா திட்டத்திற்காக எத்தனை ஏக்கர் காணி மாகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழிருந்து பெறப்படுகின்றது? வடக்கு பிராந்தியத்திலிருந்து இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன, மேலும் எத்தனை குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்கள் தெரிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட முறைமை என்ன?
மயிலத்தமடு மற்றும் மாதவனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய மற்றும் மேய்ச்சல் நிலங்கள் போன்ற உள்ளுர் மக்களால் முன்பு பயன்படுத்தப்பட்ட காணியில் எவ்வளவு பகுதி மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது?
கிவுல் ஓயா திட்டத்திற்காக 13,000 ஏக்கர் காணி பயன்படுத்தப்படவுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். அவ்வாறாயின் மயிலத்தமடு மற்றும் மாதவனை விவசாய மற்றும் மேய்ச்சல் தரைக்காக மகாவலி 'எல்' வலயத்தில் இருந்து 3000 ஹெக்ரேயர் காணியினை விடுவிப்பதில் உள்ள பிரச்சினை என்ன?
மகாவலி 'கே' வலயம் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இந்த திட்டம் எங்கே உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பயன்படுத்தப்படவிருக்கின்ற காணியின் விஸ்தீரணம் எவ்வளவு என்பதுடன், இந்த 'கே' வலயத்திட்டத்தின் நோக்கம் என்ன?
நில ஒதுக்கீட்டு கொள்கைகள் காரணமாக மக்கள் அமைப்பில் மாற்றம் அல்லது உள்ளுர் தேசிய இனங்களின் இடம்பெயர்வு மற்றும் புறக்கணிப்பு ஏற்படாமல் இருக்க அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்று கேள்விகளை முன்வைத்தார்.
இதன்போது எழுந்து பதிலளித்த விவசாயம் மற்றும் காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், இந்த கேள்விகள் தேசிய பிரச்சினைகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இதற்கு விரிவான பதிலளிக்க வேண்டும்.ஆகவே அதற்கு இரண்டு வாரம் காலவகாசம் கோருகிறேன் என்றார்.





