இஸ்லாமிய தீவிரவாதப் பொருட்களைப் பகிர்ந்த வழக்கில் இங்கிலாந்து இளைஞர் குற்றவாளி என அறிவிப்பு
லண்டனிலுள்ள ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற இரண்டு வார விசாரணையின் முடிவில் வெள்ளிக்கிழமை அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பயணத்திற்குப் பின்னர் பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஷுஜா ஜிப்ரெய்ல் மொஹ்சின், இஸ்லாமிய தீவிரவாதப் பொருட்களை வைத்திருந்ததற்கும் பகிர்ந்ததற்கும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
லண்டனிலுள்ள ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற இரண்டு வார விசாரணையின் முடிவில் வெள்ளிக்கிழமை அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட உள்ளது.
லண்டன் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணையில், மொஹ்சின் தீவிரவாத உள்ளடக்கங்களைப் பார்வையிட்டதுடன், தலிபான், ஹமாஸ் மற்றும் ஐ.எஸ். தொடர்புடைய இணையவழி அரட்டைக் குழுக்களிலும் இணைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அவர் இணையத்தில் தொடர்பில் இருந்த ஒருவருக்கு வெடிகுண்டு தயாரிப்பு கையேட்டையும், ஐ.எஸ். அமைப்பின் மரணதண்டனை காணொளிகளையும் அனுப்பியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
2024 ஜனவரியில் பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்து திரும்பியபோது, ஹீத்ரோ விமான நிலையத்தில் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளால் மொஹ்சின் விசாரணைக்காக தடுத்து நிறுத்தப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது மின்னணு சாதனங்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர் ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்டிருந்தார்.





