சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு டிஜிட்டல் முறை பரிமாற்றங்களுக்குள் நுழைய வேண்டும் - ஜனாதிபதி அநுரகுமார
இந்த க்யூ.ஆர் முறைமை ஒரு கலாசாரமாக மாற வேண்டுமானால், சமூகப் பிணைப்புகளுடன் தொடர்புடைய அனைத்துப் பரிமாற்றங்களையும் இது பிரதிபலிக்க வேண்டும்.
மத்திய கிழக்கு நெருக்கடியால் எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தரப்பினருக்கு ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை ஒப்பிட வேண்டும். விலையை அதிகமாக உயர்த்தினால் பொருளாதாரம் சுருங்கும். மறுபுறம் விலையை சரியாகச் சீரமைக்காவிட்டால் நிறுவனக் கட்டமைப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும். இதனைச் சமநிலைப்படுத்த வேண்டும். அதற்கு மிகவும் பொருத்தமானது தகுதியான மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதாகும். ஆனால் அதற்கான தரவுகளைத் திரட்டுவது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இத்தகைய சிக்கலான பிரச்சினைகளுக்கு டிஜிட்டல் முறைமை மூலமான பரிமாற்றங்களுக்குள் நாம் நுழைய வேண்டும். அப்போதுதான் மானியங்களைச் சரியான இலக்குகளுக்குக் கொண்டு சேர்க்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேசிய கியூ.ஆர் (கோட்டா) கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் 06-04-2026 அன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, டிஜிட்டல் மயமாக்கல் என்பது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டமாகும்.அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை கொண்ட,வினைத்திறனான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான ஒரு முறைமை உருவாகும் அதேவேளை,நாட்டின் முறைசாரா பொருளாதாரத்தின் பங்களிப்பை படிப்படியாக முறையான பொருளாதாரத்திற்குள் உள்வாங்க முடியும்.
பரிமாற்றங்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் எமது சமூகத்தில் நிலவினாலும்,அந்தப் பிணைப்பை பழைய காகிதப் புத்தகத்திலிருந்து புதிய டிஜிட்டல் முறைமைக்கு மாற்ற நாம் இன்னும் தவறியுள்ளோம்.மக்களுக்கு மிகவும் எளிதான மற்றும் வினைத்திறனான ஒரு முறையாக இந்தப் புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
எமது பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் நாம் ஒரு இடத்தில் தேங்கி நிற்கிறோம். அதாவது எமது பரிமாற்றங்கள், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சமூகத் தரவுகளை முறையான வெளிப்படைத்தன்மையுடன் திரட்டத் தவறியுள்ளோம். எமது அரசாங்கக் கொள்கையின்படி, மானியங்கள் இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். ஆனால் அந்த இலக்குடைய மக்களை எவ்வாறு தெரிவு செய்வது என்ற சவாலை நாம் எதிர்கொள்கிறோம்.
உதாரணமாக, மத்திய கிழக்கு நெருக்கடியால் எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்தது. இதனை நாம் இரண்டு கோணங்களில் பார்த்தோம். எரிபொருள் விலை உயர்வு நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தரப்பினருக்கு ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை ஒப்பிட வேண்டும். விலையை அதிகமாக உயர்த்தினால் பொருளாதாரம் சுருங்கும். மறுபுறம் விலையைச் சரியாகச் சீரமைக்காவிட்டால் நிறுவனக் கட்டமைப்பைத் தொடர முடியாத நெருக்கடி ஏற்படும். எனவே, இதனைச் சமநிலைப்படுத்த வேண்டும். அதற்கு மிகவும் பொருத்தமானது தகுதியான மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதாகும். ஆனால் அதற்கான தரவுகளைத் திரட்டுவது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களைக் கவனித்து, டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மானியத்தால் அதிக பலன் பெறுவது யார்? கிராமத்தில் ஒருவர் 05 லீட்டர் டீசல் பெற்றால் அவருக்கு 500 ரூபாய் மானியம் கிடைக்கும். ஆனால் ஒரு பெரிய வாகனத்திற்கு 100 லிட்டர் அடித்தால் அவருக்கு 10,000 ரூபாய் மானியம் கிடைக்கும். இந்தச் சிக்கலைத் தீர்க்க தரவுகளைத் திரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். அங்கு பணப்பரிமாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தப் பரிமாற்றங்கள் ஒருவரின் பொருளாதார நிலையை வெளிப்படுத்தும். அதன் அடிப்படையில் மானியம் வழங்குவதற்கான ஒரு அளவுகோலை உருவாக்கலாம். இத்தகைய சிக்கலான பிரச்சினைகளுக்கு டிஜிட்டல் முறைமை மூலமான பரிமாற்றங்களுக்குள் நாம் நுழைய வேண்டும். அப்போதுதான் மானியங்களைச் சரியான இலக்குகளுக்குக் கொண்டு சேர்க்க முடியும்.
ஒவ்வொரு துறையிலான பரிவர்த்தனைகளும் இந்த டிஜிட்டல் முறைமையில் சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் முறைசாரா பொருளாதாரத்தை முறையான பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முடியும்.அதனால் டிஜிட்டல் மயமாக்கல் வேலை திட்டம் எமது பிரதான திட்டமாகும். டிஜிட்டல் பொருளாதாரத் துறையில் 15 பில்லியன் டொலர் இலக்கை நாம் கொண்டுள்ளோம். இது வெறும் டிஜிட்டல் துறையை மட்டும் உருவாக்குவதல்ல. விவசாயம்இ சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்குள் டிஜிட்டல் மயமாக்கலைக் கொண்டு வருவதன் மூலம் ஏற்படும் வினைத்திறன் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும்.
இருப்பினும், இதனை முறையான வகையில் குறிப்பிடத்தக்க அளவில் பிரபலப்படுத்துவதற்கு நாம் இன்னும் தவறியுள்ளோம். கொடுக்கல் வாங்கல்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் நம்மிடம் உள்ளது. கொடுக்கல் வாங்கல்கள், வைப்புச் செய்தல் என வங்கி முறைமையுடன் மிகவும் முன்னேற்றமடைந்த ஒரு கலாசாரமும் பிணைப்பும் எமது மக்களிடையே காணப்படுகிறது.
ஆயினும், அந்தப் பிணைப்பை பழைய காகிதப் புத்தகத்திலிருந்து புதிய முறைமைக்கு மாற்றுவதற்கு நாம் இன்னும் தவறியுள்ளோம். அதேபோல், அதனை நமக்குத் தேவையான அளவில் கட்டியெழுப்பவும் இன்னும் முடியவில்லை. எனவே, இவ்வாறான கலாசாரத்தைக் கொண்டுள்ள மக்களிடையே இந்தப் புதிய கொடுப்பனவு முறைமைகளை எப்படிக் கொண்டு செல்வது என்பதே எமது முக்கிய எதிர்பார்ப்பாகும். அதற்கு பிரதானமாக ஊடகப் பிரச்சாரங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வுக்கான பரந்த அளவிலான திட்டங்கள் அவசியமாகும். அது குறித்து டிஜிட்டல் அமைச்சு தற்போது கவனம் செலுத்தியுள்ளது.
எமது கலாசாரத்தின் பணப்பரிமாற்றங்கள் ஒரு அங்கமாக உள்ளன. பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும் போது பணம் கொடுக்கிறோம். புத்தாண்டுக்கு பணம் வழங்குகிறோம். இந்த க்யூ.ஆர் முறைமை ஒரு கலாசாரமாக மாற வேண்டுமானால், சமூகப் பிணைப்புகளுடன் தொடர்புடைய அனைத்துப் பரிமாற்றங்களையும் இது பிரதிபலிக்க வேண்டும். இல்லையெனில் சமூகம் இதனை முழுமையாக ஏற்காது.
மக்களின் கலாசாரப் பரிமாற்றங்களை இதற்குள் கொண்டு வர புதிய கருவிகள் மற்றும் மாதிரிகள் தேவை. அனைத்து பரிமாற்றங்களிலும் கேந்திர நிலையமொன்று உள்ளது. அந்த கேந்திர நிலையமான மத்திய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இதற்கு ஆதரவு வழங்கினால் இதனை வெற்றியடையச் செய்யலாம். இந்த புத்தாண்டு காலத்தில் நடைபெறும் பணப்பரிமாற்றங்களை க்யூ.ஆர் முறைமைக்கு மாற்றும் வகையில் ஒரு பிரச்சாரத் திட்டத்தை உருவாக்கினால் அது ஒரு சிறந்த திருப்புமுனையாக அமையும். எமது சமயம் புதிய விடயங்களை ஏற்கத் தயார், ஆனால் அவை ஈர்க்கக்கூடியதாகவும் எளிதாகவும் இருக்க வேண்டும்.
எமது சமூகம் புதிய விடயங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக உள்ளது. ஆனால், அந்தப் புதிய விடயங்கள் ஈர்க்கக்கூடியதாகவும் எளிதாகவும் இல்லையென்றால் மக்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, இந்தச் செயல்முறையை உயிர்ப்பிப்பதற்குத் தேவையான வசதிகளை நாம் வழங்க வேண்டும். ஏனெனில், சமூகம் வினைத்திறனான விடயங்களையே உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அதனால் அரசாங்கம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கொடுத்தால், மிக விரைவாக சமூகத்திற்குள் இந்த வேலைத்திட்டம் பிரபலமடையத் தொடங்கும். எனவே, அதற்கான தேவையான ஆதரவையும் தலையீட்டையும் உங்கள் அனைவரிடமிருந்தும் நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.





