முதலீட்டாளர்கள் தைரியமாக தமது பணிகளில் ஈடுபடலாம் :அமைச்சர் பிமல்
கடவத்தை-மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 17-09-2025 அன்று நடைபெற்றது.
கடவத்தை –மீரிகம அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டம் 2028 புத்தாண்டுக்குள் நிறைவு செய்யப்படும்.தெற்கு அபிவிருத்தி பணிகள் நிறைவு செய்யப்படும்.முதலீட்டாளர்கள் தைரியமாக தமது பணிகளில் ஈடுபடலாம்.கடந்த அரசாங்கங்களை போன்று நாங்கள் நெருக்கடிகளை ஏற்படுத்த போவதில்லை யென போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கடவத்தை-மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 17-09-2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் உரையாற்றியதாவது,
கடவத்தை –மீரிகம அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டத்துக்கு நிதியுதவியளித்துள்ள சீன அரசாங்கத்துக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இலங்கை மக்கள் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் புதிய பாதையை தெரிவு செய்தார்கள். 75 ஆண்டகால ஊழல்மிக்க பாதையை புறக்கணித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய பாதையை தெரிவு செய்துள்ளார்கள். தவறான பாதையினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்து சமூக கட்டமைப்பும் பாதிக்கப்பட்டது.
இந்த அபிவிருத்தி கருத்திட்டத்துக்கான ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டு அபிவிருத்தி பணிகள் 2020 ஆம் ஆண்டளவிலே ஆரம்பிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி,ஊழல் மோசடி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்த அபிவிருத்தித் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இடைநிறுத்தப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டத்தை மீள ஆரம்பிக்கும் போது 35 ஆயிரம் மில்லியன் ரூபாவை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளது.ஆகவே கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் சிறந்த திட்டமிடலுடன் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே தேசிய முதலீட்டாளர்கள் தைரியமாக தமது பணிகளை ஆரம்பிக்க முடியும்.கடந்த கால அரசாங்கங்களை போன்று எமது அரசாங்கம் நெருக்கடிகளை ஏற்படுத்தாது.
கடவத்தை –மீரிகம அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டம் 2028 புத்தாண்டுக்குள் நிறைவு செய்யப்படும்.தெற்கு அபிவிருத்தி பணிகள் நிறைவு செய்யப்படும்.அத்துடன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையும் புனரமைக்கப்படும் என்றார்.





