செம்மணி அகழ்வில் தரையை ஊடுருவும் ராடர்
செம்மணியில் குறித்த பகுதிக்குள் மட்டும் அகழ்வுகளை மேற்கொள்ளாமல், பரந்துபட்ட இடங்களிலும் மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் வலியுறுத்தல்கள் அதிகரித்தன.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில், தற்போது தரையை ஊடுருவும் ராடர் (GPR – Ground Penetrating Radar) மூலம் பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்பம் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு, துரிதகதியில் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இது தொடர்பாக, செய்மதிப் படங்களின் அடிப்படையில் அகழ்வுப் பணிகளுக்கு வெளியே புதிய இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை, துறைசார் நிபுணரான சோமதேவாவினால் உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளாகும்.
இந்நிலையில், செம்மணியில் குறித்த பகுதிக்குள் மட்டும் அகழ்வுகளை மேற்கொள்ளாமல், பரந்துபட்ட இடங்களிலும் மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் வலியுறுத்தல்கள் அதிகரித்தன.
இந்தக் கோரிக்கைகளை அடுத்து, ஜி.பி.ஆர். ஸ்கானிங் இயந்திரம் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு, தற்போது ஆய்வுகள் ஆரம்பிக்கத் தயாராகின்றன. இலங்கையில் இதுவரை முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் போன்ற இடங்களில் AMRI ஸ்கானர் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தரையை ஊடுருவும் ராடர் (GPR) பயன்படுத்தப்படும் முதலாவது இடமாக செம்மணி புதைகுழி பதியப்படுகிறது.
இந்த ராடர் அமைப்பு, காங்கிரீட் போன்ற தடைகளை ஊடுருவி, நிலத்துக்குக் கீழ் இருக்கும் பொருட்கள் மற்றும் உடற்கூறுகளை திரையில் காண்பிக்கக்கூடிய நவீன தொழில்நுட்பமாகும். கனடா போன்ற நாடுகளில் மனிதப் புதைகுழிகளை கண்டறியவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஆய்வுப் பணிகளை எளிதாக்கும் வகையில் செம்மணிப் புதைகுழிக்கு அருகிலுள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்படுகின்றன. இந்த ஸ்கானிங் மூலம் மேலும் பல எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்படக்கூடும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் விரைவில் இந்த பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ளன.