திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: தேரர் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை
அடுத்த தவணையன்று இது தொடர்பான விரிவான அறிக்கையை பொலிஸார் மன்றிற்கு முன்வைக்க வேண்டும் என்றும் அவர் உத்தவிட்டுள்ளார்.
திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானத்தை அமைத்தமைக்காக பௌத்த பிக்கு மற்றும் அவருடன் உடன் இருந்தவர்களுக்கு எதிர்வரும் ஐனவரி 14ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி எம்.என்.எம்.சம்சுடீன் அழைப்பாணை விடுத்துள்ளார்.
அனுமதியின்றி கடந்த 15ஆம் திகதி கடற்கரைப்பகுதியில் கட்டுமானத்தை அமைத்தமைக்காக திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாராதிபதி கல்யாணவன்ஸ திஸ்ஸ தேரர் மற்றும் அவருடன் இருந்த சிலருக்கு எதிராக கரையோரப்பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களமும், திருகோணமலை துறைமுக பொலிஸாரும் முன்வைத்த மனுவை 26-11-2025 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி எம்.என்.சம்சுடீன் சமர்ப்பணங்களை ஆராய்ந்ததன் பின்னர் இவ்வழக்கில் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டார்.
அடுத்த தவணையன்று இது தொடர்பான விரிவான அறிக்கையை பொலிஸார் மன்றிற்கு முன்வைக்க வேண்டும் என்றும் அவர் உத்தவிட்டுள்ளார்.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் சார்பில் அதன் திருகோணமலை மாவட்ட அதிகாரிகளும், திணைக்கள சட்டத்தரணியும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். இதேவேளை பொலிஸ் தரப்பில் மாவட்ட சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர், திருகோணமலை பிரிவிற்கான பொலிஸ் அத்தியட்சகர், துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிராளிகளாகக் குறிப்பிட்டுள்ள தேரர் உள்ளிட்டவர்களும் அவர்களது சார்பில் சட்டத்தரணிகளும் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





