நாமல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார் - சரத் வீரசேகர
நாமல் ராஜபக்ஷ எமது கட்சியின் தேசிய அமைப்பாளர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அவரே வேட்பாளராகக் களமிறங்குவார் என்பதில் எமக்கு ஐயமில்லை.
சிங்கள பௌத்த தலைவரான கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வர சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட பயங்கரவாதிகள் முயன்றனர் என்பதைநாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நாமல் ராஜபக்ஷ வேட்பாளராகக் களமிறங்குவார் என்பது உறுதியென முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நலன் கருதி களனி விகாரையில் பொதுஜன பெரமுன கட்சியின் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினரால் 06-06-2026 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற போர்வையில் சஹ்ரான் ஹாஷிம், அவனது சகோதரன், பெற்றோர் மற்றும் ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிம் என்பவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எனத் தீவிரவாதிகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால், இவர்களது நோக்கம் என்னவென்பது தெளிவாகும்.
ஒரு சிங்கள பௌத்த தலைவரை ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் ஏன் இவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டன? அவர்களின் இந்த சதித்திட்டத்துக்குப் பின்னாலுள்ள சிந்தனை என்னவென்பதை நாம் புத்திசாலித்தனமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு சிங்கள பௌத்த தலைவரை முன்னிறுத்துவதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் போக்கைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவோ அல்லது குழப்பங்களை விளைவிக்கவோ அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்பதைத்தான் அவர்களின் இந்தச் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.
நாமல் ராஜபக்ஷ எமது கட்சியின் தேசிய அமைப்பாளர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அவரே வேட்பாளராகக் களமிறங்குவார் என்பதில் எமக்கு ஐயமில்லை. வீழ்ச்சியடைந்திருந்த கட்சியை இன்று நாமல் ராஜபக்ஷ பலமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். இன்று அரசியல் மேடைகளில் ராஜபக்ஷக்களைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். அந்தளவுக்கு எமது கட்சி வலுப்பெற்றுள்ளது என்றார்.





