ரங்க ராஜபக்ஷவின் மரணம் குறித்து உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை தேவை - ஷிரால்
ஹர்ஷ டி சில்வா கூறுவது போல் இது ஒரு திருட்டு. நிதிச் செயலாளர் 4 மாதங்களாக இதனை மறைத்ததில் எமக்கு சந்தேகம் உள்ளது.
திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்குக் கைமாறிய சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்சவின் மரணம் குறித்து உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென சட்டத்தரணி ஷிரால் லக்திலக கோரியுள்ளார்.
வெற்றி பெறும் தெற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சட்டத்தரணி ஷிரால் லக்திலக கொழும்பில் 02-05-2026 அன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி மோசடி குறித்து நிதி அமைச்சின் செயலாளர் 4 மாதங்களாகத் தகவல்களை மறைத்திருப்பது கடுமையான சந்தேகத்தைத் தோற்றுவி த்துள்ளது.
நிதியமைச்சின் அதிகாரியின் மரணம் ஒரு தற்கொலை என சட்ட வைத்திய அதிகாரிகள் குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில் தற்கொலைகள் மற்றும் மரணங்கள் தொடர்பான வைத்திய அறிக்கைகள் குறித்த ஒரு மோசமான வரலாறு இருப்பதை நாம் அறிவோம்.
தாஜுதீனின் மரணம் தொடர்பிலும் இவ்வாறான உத்தியோகபூர்வ அறிக்கைகள் வந்தன, ஆனால் அவை சரியானவை அல்ல என்பது பின்னரே தெரியவந்தது. எனவே, இந்த மரணப் பரிசோதனை அறிக்கை நல்லது, ஆனால் மருத்துவ அறிவியலில் இதற்கு அடுத்த கட்டமாக உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை ஒன்று உள்ளது. அதனை முன்னெடுக்குமாறே நாம் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரிடம் கோருகிறோம்.
உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை என்பது மூன்று விடயங்களை ஆராயும். தற்கொலைக்கான காரணம் என்ன? அவரது மனநிலை எவ்வாறு இருந்தது? அந்த மரணம் எவ்வாறு சம்பவித்தது? மரணத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்களை ஆராய வேண்டும்.
ஹர்ஷ டி சில்வா கூறுவது போல் இது ஒரு திருட்டு. நிதிச் செயலாளர் 4 மாதங்களாக இதனை மறைத்ததில் எமக்கு சந்தேகம் உள்ளது.
உயிரிழந்த அதிகாரியின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு செயல்பாடு இதன் பின்னணியில் இருந்திருக்கலாம். இது எனது தவறு அல்ல என்ற அடிப்படையிலேயே இந்தத் தற்கொலை நடந்திருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம்.
ஒன்பது தடவைகள் இது தவறுதலாக நடக்கவில்லை என்றால், அதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அவருக்கு அந்தச் சூழலை உருவாக்கியது யார்? என்பது தொடர்பில் வௌிப்பட வேண்டும் என்றார்.





