ஜெனிவா செல்கிறார் சிறிதரன்
இன்றைய தினம் ஜெனிவா சென்றடையவுள்ள தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிறிதரன், அங்கு இன்று நடைபெறவுள்ள பக்கநிகழ்வொன்றில் பங்கேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கான ஜெனிவாவை சென்றடையவுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், அங்கு வேறு பல முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் புதிதாக நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த 9 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், அதில் திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட முதலாவது மீளாய்வு வரைவு கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில் இன்றைய தினம் ஜெனிவா சென்றடையவுள்ள தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிறிதரன், அங்கு இன்று நடைபெறவுள்ள பக்கநிகழ்வொன்றில் பங்கேற்கவுள்ளார்.
அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினதும், பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளினதும் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்துவார் என்றும், அதன்போது தமிழர்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.