காமன்வெல்த் 2026: வறுமை, கொடுமைகளை வென்று தங்கம் வென்ற பாரா வீராங்கனை ஷர்மிளா தங்கர்
வயிற்று பிழைப்பிற்காக அவர் ஒரு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராகவும் காவலாளியாகவும் பணியாற்றினார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வறுமை, உடல் குறைபாடு மற்றும் குடும்ப வன்முறை எனப் பல சோதனைகளைச் சந்தித்த ஹரியானாவை சேர்ந்த 40 வயதான ஷர்மிளா தங்கர், கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
காமன்வெல்த் பாரா தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
ஹரியானாவில் உள்ள சித்ரௌலி கிராமத்தில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஷர்மிளா.
போதிய மருத்துவ வசதிகள் இல்லாத சூழலில், இரண்டு வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இடது காலை நிரந்தரமாக இழந்தவர்.
வறுமைக்கு நடுவே தனது 10-ஆம் வகுப்பு படிப்பை முடித்த கையோடு, அவருக்கு அவசர அவசரமாக திருமணமும் செய்து வைக்கப்பட்டது. முதல் திருமண வாழ்க்கை அவருக்கு நரகமாக மாறியது. குடிப்பழக்கம் மற்றும் போதைக்கு அடிமையான அவரது கணவர், கூடுதல் வரதட்சணை கேட்காமலும், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த காரணத்தினாலும் ஷர்மிளாவை கடுமையாகத் தாக்கி வந்தார். தனது 26-வது வயதில் ஆடையின்றி வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஷர்மிளாவை அவரது பெற்றோர் மீட்டுச் சென்றனர்.
வயிற்று பிழைப்பிற்காக அவர் ஒரு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராகவும் காவலாளியாகவும் பணியாற்றினார்.
28 வயதில் அஜித் சிங் என்பவரை மறுமணம் செய்ததே ஷர்மிளாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவரது கணவர், ஷர்மிளாவையும் அவரது பெண் குழந்தைகளையும் அன்புடன் ஏற்றுக்கொண்டதோடு, பாரா விளையாட்டுத் துறையில் ஈடுபட ஊக்கமளித்தார்.
கடின உழைப்பிற்குப் பின், மகளிர்களுக்கான F57 குண்டு எறிதல் பிரிவில் 9.81 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றி, கடந்த 20 ஆண்டுகளாக காமன்வெல்த் பாரா தடகளப் பிரிவில் நிலவி வந்த பதக்க வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார். வேதனைகளை தாண்டி சாதனை படைத்துள்ள ஷர்மிளாவின் இந்த வெற்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது.





