இலங்கை - வியட்நாம் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நேரடி விமான சேவை ஆரம்பம்
2026 ஆகஸ்ட் மாதத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டன.
இலங்கை அரசுக்கும் வியட்நாம் அரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், வியட்நாமின் Vietjet விமான சேவையானது கொழும்புக்கான தனது முதலாவது நேரடி விமான சேவையை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லாக, வியட்நாமின் ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்திலிருந்து புறப்பட்ட Vietjet நிறுவனத்தின் முதலாவது நேரடி விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
நாட்டை வந்தடைந்த எயார்பஸ் 320 (Airbus 320) ரக விமானத்தில் 169 பயணிகள் வருகை தந்ததுடன், கொழும்பிலிருந்து ஹோ சி மின் நகருக்கான மறுபயணத்தில் 171 பயணிகள் பயணித்தனர்.
இப்பயணத்தில் இணைந்துகொண்ட பயணிகள் மற்றும் பணியாளர்களை வரவேற்பதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, இலங்காவுக்கான வியட்நாம் தூதுவர் திருமதி டிரின் தி டாம் (Trinh Thi Tam) ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் வியட்நாமிற்கான இலங்கைத் தூதுவர் போஷித பெரேரா மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குவதற்கு 1992 ஆம் ஆண்டிலேயே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருப்பினும், 16 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் தலைவர் என்ற வகையில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட வியட்நாமிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகள் வலுப்பெற்றதுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக இந்த நேரடி விமான சேவைக்கான வாய்ப்பு உருவானது.
மேலும், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர், அமைச்சர் அனுர கருணாதிலக்கவைச் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, 2026 ஆகஸ்ட் மாதத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் அனுர கருணாதிலக்க, இந்த புதிய விமான சேவையின் மூலம் இலங்கையின் வான்வழி இணைப்பு வலையமைப்பு மேலும் வலுப்படுவதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, சமய மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க கருத்து தெரிவிக்கையில், இந்த நேரடி விமான சேவையின் மூலம் சுற்றுலாச் சந்தையை மேம்படுத்த முடிவதுடன், ஹோ சி மின் நகர் ஒரு வர்த்தக மற்றும் பொருளாதார மையமாக விளங்குவதால் பொருளாதார ரீதியிலான பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், Vietjet விமான நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் 'ஆண்ட்ரூ தி ஏவியேஷன்' (Andrew the Aviation) தனியார் நிறுவனம் பயணிகள் சேவைகளையும் வசதிகளையும் வழங்கி வருகிறது. வாரத்தின் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் கொழும்புக்கும் ஹோ சி மின் நகருக்கும் இடையே இவ்விமான சேவைகள் இயக்கப்படும்.





