போர் இல்லாத நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை வரவழைக்கத் திட்டம்
திரைப்பட சுற்றுலாத் துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றையதினம் கூடியது.
தற்போதைய உலகளாவிய வலுசக்தி நெருக்கடிக்கு மத்தியில் இந்நாட்டின் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவது மற்றும் தொழில்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஆதரவை வழங்கும் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்கின்ற இடங்களை முறையாகப் பராமரித்தல் மற்றும் போர்ச் சூழல் இல்லாத நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பேர வாவியை சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
திரைப்பட சுற்றுலாத் துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கம்முவ, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, வெளிநாட்டு அலுவல்கள்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





