ஆளுங்கட்சியின் 159 உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் 3 கோடி ரூபாய் மக்கள் நிதியை முறைகேடாக தமது கட்சியின் நிதியத்துக்கு வழங்கியுள்ளார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்கள் மாதாந்தம் சுமார் 3 கோடி ரூபாவை மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்துக்கு வழங்கி மக்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக குறிப்பிட்டு பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில் ஆளுங்கட்சியின் 159 உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் 29-09-2025 அன்று திங்கட்கிழமை முறைப்பாடளித்ததன் பின்னர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு பின்வருமாறு குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான தேவானந்த சுரவீர 'நாங்கள் அனைவரும் எமது மாதாந்த சம்பளத்தை மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்துக்கு முழுமையாக வழங்குகிறோம்.கட்சி கொடுக்கும் நிதியில் இருந்து தான் வாழ்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தனது மாத சம்பளத்தை தனது விருப்பத்துக்கேற்ப செலவு செய்ய முடியாது.செலவு செய்யும் முறைமை தொடர்பில் நிச்சயிக்கப்பட்ட விடயதானங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாதாந்த கொடுப்பனவு, வருகைக்கான கொடுப்பனவு மற்றும் குழுக்களில் பங்குப்பற்றுவதற்கான கொடுப்பனவு என்ற மூன்று கொடுப்பனவுகளை மாத்திரம் தனது விருப்பத்துக்கேற்ப பயன்படுத்த முடியும்.விருந்துபசார கொடுப்பனவு, தொலைபேசி மற்றும் வாகனத்துக்கான கட்டண கொடுப்பனவு, அலுவலக கொடுப்பனவு,எரிபொருள் கொடுப்பனவு ஆகிய கொடுப்பனவுகளை கட்சியின் நிதியத்துக்கு வழங்கி அவற்றை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது மக்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாகவும்.
தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் 3 கோடி ரூபாய் மக்கள் நிதியை முறைகேடாக தமது கட்சியின் நிதியத்துக்கு வழங்கியுள்ளார்கள்.இவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தில் எவருக்கும் சிறப்பு சலுரக வழங்கப்படாது என்பதை அரசாங்கம் தாரக மந்திரமாக குறிப்பிடுகிறது.159 பேருக்கு எதிராக சட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது என்பதை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.