ஈரான் தலைவரின் மறைவுக்கு அனுதாபம் இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு கண்டனம் - மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்
காசா மீதான இஸ்ரேலியப் போர் மற்றும் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் விஷயங்கள் குறித்து பதவியேற்றதிலிருந்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுவரும் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.
ஈரான் மீது அமெரிக்காவும் ,இஸ்ரேலும் நடத்திய மிகவும் கொடூரமான, ஒருதலைப்பட்சமான தாக்குதல் கவலை அளிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ஈரானின் உயர் தலைவர் அலி கமேனி மற்றும் உயர்மட்ட அரச பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதிர்ச்சியூட்டும் வகையில்,சர்வதேச சட்டத்தை முற்றாக மீறி, அமெரிக்கா, இஸ்ரேல் அகியவற்றால் தேவையற்ற விதத்திலும், பொறுப்பற்ற விதத்திலும் மேற்கொள்ளப்பட்டதாக விவரிக்கப்படும் இந்த தாக்குதலில் தங்கள் பெருமதிப்பிற்குரிய உயர் தலைவரின் இழப்புக்கு மத்தியில் ஈரான் மக்கள் துயரத்தில் ஆழ்திருக்கும் வேளையில், அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த கவலையையும், உளப்பூர்வமான அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் மூலம் பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்க ஈரான் தெளிவாக முயன்று வந்திருக்கிறது.
மேலும் அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது பாதிக்கப்பட்ட ஈரான் அரசின் பதிலடி குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி தரும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது, அதில், ஈரான் அல்லது அதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய இழப்புகள் பற்றிய எந்தவிதமான குறிப்பையும் தவிர்த்துக்கொண்டுள்ளது,ஈரான், இலங்கையுடன் வரலாற்று ரீதியாக நட்புறவைப் பேணி வரும் ஒரு நாடு என்பதை மறந்துவிடக் கூடாது.
இலங்கை அரசாங்கம் கையாண்டிருக்கும் சொல்லாட்சி, ஈரானின் உயர் தலைவரின் மரணத்தைச் சூழ்ந்திருந்த மிலேச்சத்தனத்தை அங்கீகரிப்பதாகவே தோன்றுகிறது, இந்த இழி செயலைக் கண்டிப்பதற்கும், இறையாண்மை கொண்ட ஒரு தேசத்திற்கு எதிரான அவர்களின் "வெற்றிகரமான" (?) இராணுவத் தாக்குதல்களைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் ஆக்கிரமிப்பாளர்களினால் அவர் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிப்பதற்குப் பதிலாக, அணிசேரா கொள்கை மற்றும் நடுநிலைமையைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொண்டே, இலங்கை அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய நிலைப்பாட்டிலும், பல சந்தர்ப்பகளில் காசா மீதான செயற்பாட்டிலும் அதன் தொடர்ச்சியான நழுவல் போக்கை வெளிக்காட்டியுள்ளது கவலையளிக்கிறது.
காசா மீதான இஸ்ரேலியப் போர் மற்றும் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் விஷயங்கள் குறித்து பதவியேற்றதிலிருந்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுவரும் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.
இலங்கை அரசாங்கத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விதத்தில்,அமெரிக்க -இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பின் அட்டூழியத்தைப் பற்றி அறவே குறிப்பிடாமல், பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டின் மீது பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் சுமையை ஒரு விவேகமான அரசாங்கம் எவ்வாறு சுமத்த முடியும்?
ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியினர் என்ற அடிப்படையில், அமெரிக்க-இஸ்ரேலிய படையினரின் அத்துமீறிய ஆக்கிரமிப்பையும் ஈரானின் உயர் தலைவரின் வெறுக்கத்தக்க படுகொலையையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றுள்ளது.





