நீலகாமம் பிரகடனம் மனோ எம்.பியிடம் கையளிப்பு
அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் ஓரிடத்தில் கூடி ஆராய்ந்து ஒற்றுமையாகத் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், மலையக மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் நேற்று வெளியிடப்பட்ட 'நீலகாமம் பிரகடனம்' அரசியல் தலைவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
சமூக செயற்பாட்டுக்கான இளைஞர் குழு ஏற்பாட்டில் கஹவத்தை, நீலகாமம் முதலாம் இலக்கப் பிரிவுத் தோட்டத்தில் 25-04-2026 அன்று இடம்பெற்ற திறந்தவெளி மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தோட்ட தொழிலாலளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த 2026 ஏப்ரல் 22ஆம் திகதி நீலகாமம் தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட மலேச்சத்தனமான தாக்குதலானது, நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் எமது இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். தோட்ட நிர்வாகங்களால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான தொழிலாளர் அடக்குமுறைகள் மற்றும் அராஜகங்களை இனிமேலும் தாங்கிக் கொள்ள முடியாது.
தோட்டத் தொழிலாளர்களையோ அல்லது பெருந்தோட்டங்களைச் சார்ந்திருப்போரையோ அச்சுறுத்துதல் மற்றும் அடக்குமுறைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளைத் தோட்ட நிர்வாகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். குறிப்பாகத் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்புப் படையினரை அழைத்து வந்து தாக்குதல்கள் நடத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு ஒவ்வொரு தோட்டத்திலும் தோட்டத் தலைவர்கள், நிர்வாக சபையினர், சட்டத்தரணிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய 'தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு' உருவாக்கப்பட வேண்டும். இக்குழுக்கள் பெருந்தோட்ட மற்றும் சமூக வசதிகள் அமைச்சின் கண்காணிப்புடன் மாவட்ட ரீதியில் செயற்படுத்தப்படுவது அவசியமாகும்.
மேலும், இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தேசத்திற்காக உழைக்கும் மக்களுக்கு முறையான முகவரியுடன் கூடிய காணி மற்றும் வீடமைப்புத் திட்டத்தை பாராளுமன்றமும் தற்போதைய அரசாங்கமும் பாரபட்சமின்றி முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும். இதற்காக சுயாதீனமாக இயங்கும் குழுவொன்றைப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்க வேண்டும்.
மலையகப் பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில், கட்சி மற்றும் பிரதேச வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் ஓரிடத்தில் கூடி ஆராய்ந்து ஒற்றுமையாகத் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
பெருமழைக் காடுகளை அழித்துத் தேயிலைத் தேசங்களை உருவாக்கிய நாம், எமது மண்ணில் வாழும் உரிமையைப் பறிக்க யாருக்கும் அனுமதி வழங்கப் போவதில்லை. எமது உரிமைக்காகவும் வெற்றிக்காகவும் தொடர்ந்து போராடுவோம் என இப்பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





