சித்தாண்டியில் மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமது நியாயமான கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோசங்களும் முன்வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 2 வருட பூர்த்தியை முன்னிட்டு 15-09-2025 அன்று சித்தாண்டியில் பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது மேய்ச்சல் தரை காணியை வர்த்தமானிப்படுத்துமாறு கோரியும் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரியும் சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி, போராட்டம் நடக்கும் இடம் வரை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.
மயிலத்தமடு மாதவணை கால்நடை மேய்ச்சல் தரைப் பகுதியில் கால்நடைகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் எதிராக நடத்தப்படும் அநீதிக்கு எதிரான அறவழிப் போராட்டம் இரண்டு வருடங்களை கடந்துள்ள அதாவது 730வது நாளாக நடைபெற்றுவரும் நிலையில் இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“மயிலத்தமடுவில் உள்ள சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களை வெளியேற்று”, “பண்ணையாளர்கள் தமிழர்கள் என்பதாலா தீர்வு வழங்குவதில் தாமதம்”, “கால்நடை பண்ணையாளர்களின் கோரிக்கையினை நிறைவேற்று”, “பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு மேய்ச்சல் தரையினை வழங்கு”, “730 நாட்கள் கடந்தும் தீர்வு வழங்காதது ஏன்” போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டம் நடத்தப்பட்டது.
அத்துடன் தமது நியாயமான கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோசங்களும் முன்வைக்கப்பட்டன.
பாரம்பரியமாக கால்நடை வளர்ப்பாளர்களால் மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரையில் அயல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அத்துமீறிய விவசாய நடவடிக்கை, காடழிப்பு மற்றும் அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளைக் கொல்லுதல், பண்ணையாளர்களை அச்சுறுத்துதல் போன்ற செயற்பாடுகளை உடன்நிறுத்தி, அத்துமீறுபவர்களை வெளியேற்றி குறித்த பிரதேசத்தை தங்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக வர்த்தமானி பிரகடனப்படுத்தக் கோரி கடந்த 2023ஆம் ஆண்டு இதே நாளில் கால்நடை பண்ணையாளர்கள் தங்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர்.
இருப்பினும், அரசாங்கங்கள் மாறினாலும் குறித்த மேய்ச்சல் தரை விடயம் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எந்த அரசாங்கத்தினாலும் எடுக்கப்படாமை குறித்தும் தங்களின் கோரிக்கைக்கு எந்த அரசும் ஒரு நிரந்தரத் தீர்வினை வழங்க முன்வரவில்லை என்ற நிலைப்பாட்டில் இரண்டு வருட பூர்த்தியினை தற்போதைய அரசுக்கு தங்களின் கோரிக்கையை வெளிப்படுத்தும் முகமாக இன்றைய தினம் போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், இ.சிறிநாத், பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அரசாங்கத்துக்கு வழங்குவதற்கான மயிலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் மகஜர் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சங்கத்தின் தலைவர் நிமலன் வழங்கினார்.





