உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு
இலங்கை அரசாங்கத்தினால் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாக பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் இதன்போது குறிப்பிட்டனர்.
ஊழலற்ற இலங்கையின் தற்போதைய திட்டங்கள் குறித்து சர்வதேச சமூகத்தை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும், அதன் ஊடாக இலங்கைக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உலக வங்கியின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.
இலங்கைக்கு வருகைத் தந்துள்ள உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய வலய உப தலைவர் ஜொஹன்னஸ் சட் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் 15-09-2025 ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கையின் எதிர்கால வளர்ச்சி இலக்குகளை அடைவதில் உலக வங்கி குழுமம் எவ்வாறு ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரத் திட்டத்துக்கு பாராட்டுத் தெரிவித்த உலக வங்கி பிரதிநிதிகள்,பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர்.டிஜிட்டல் மயமாக்கல்,சுற்றுலா,விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட குறுங்கால நன்மைகள் பெறக்கூடிய துறைகளை அடையாளங்கண்டு அதன் முன்னேற்றத்துக்கு நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சி குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தினால் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாக பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் இதன்போது குறிப்பிட்டனர். நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு தேவையான சட்ட கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணி பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி,சர்வதேச அளவில் ஊழல் நிறைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்ட இலங்கை,தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான திட்டத்தின் காரணமாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் மற்றும் சமூக ரீதியாகவும் படிப்படியாக ஸ்திரமடைந்து வருவதாகவும் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார்.
உலக வங்கியின் சார்பில் இலங்கை,நேபாளம் மற்றும் மாலைத்தீவுக்கான உலக வங்கியின் துறைசார் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் கெவொர்க் சர்க்கிசியன் ஆகியோரும் இதன்போது கலந்துக்கொண்டனர்.





