எதிர்கால அரசியல் சர்வஜன அதிகாரம் கட்சியைச் சுற்றியே அமையும் -திலித் ஜயவீர
எமது பிராந்திய தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே நாம் அந்தப் பொதுக்கூட்டத்தை நடத்தினோம்.
வெறும் 24 மணித்தியால காலப்பகுதிக்குள் எம்மால் திரட்டப்பட்ட பிரம்மாண்டமான மக்கள் அலையானது, நாட்டின் எதிர்கால அரசியல் திசைமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் இலங்கையின் அரசியல் களம் சர்வஜன அதிகாரம் கட்சியை மையப்படுத்தியே அமையும் என அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மாஹபாகே, கடுல்டுபிட்டிய பிரதேசத்தில் 02-05-2026 அன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கடந்த மே தினக் கூட்டத்தைப் பற்றிச் சிலர் வியப்புடன் பேசுகின்றனர். மிகக் குறுகிய கால அவகாசத்தில், அதாவது வெறும் ஒருநாளுக்குள் எம்மால் இவ்வளவு பெரிய மக்கள் சக்தியை எவ்வாறு திரட்ட முடிந்தது என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
எமது பிராந்திய தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே நாம் அந்தப் பொதுக்கூட்டத்தை நடத்தினோம். நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சுமை மற்றும் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியிலும், மக்கள் தானாக முன்வந்து எம்மோடு இணைந்துகொண்டமை ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.
இது ஏனைய கட்சிகளைப் போல அரச வளங்களைப் பயன்படுத்தியோ அல்லது மக்களைப் பேருந்துகளில் பலவந்தமாக ஏற்றி வந்து காண்பித்த ஒரு போலியான மக்கள் கூட்டமல்ல. இது மக்களின் இதயத்திலிருந்து ஊற்றெடுத்த அன்பும் நம்பிக்கையுமாகும். இந்த எழுச்சியைக் கண்டு நாம் வியப்படையவில்லை, மாறாக இது எமது பொறுப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இன்று அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக உண்மையான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரே கட்சியாக சர்வஜன அதிகாரம் மாத்திரமே எஞ்சியுள்ளது. ஏனைய அரசியல் கட்சிகள் தத்தமது அரசியல் இருப்பு மற்றும் நிலைப்பாடு குறித்துக் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.
எங்கு செல்வது, யாரோடு இணைவது என்ற தெளிவில்லாமல் அவர்கள் திண்டாடுகின்றனர். மக்களின் உண்மையான தேவைகளையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள தவறியவர்களாலேயே இன்று நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின்மை ஏற்பட்டுள்ளது.
எதிர்கால இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக எமது கட்சி உருவெடுத்துள்ளது என்பதற்கான ஆரம்பப் புள்ளி நேற்றைய கூட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எமது கொள்கைகள் மற்றும் நாட்டுக்கான எமது தூரநோக்குச் சிந்தனையின் பக்கம் மக்கள் அணிதிரளத் தொடங்கியுள்ளனர். நாம் ஆரம்பித்துள்ள இந்தப் பயணம் தனிநபர்களுக்கானது அல்ல, இது ஒட்டுமொத்த நாட்டுக்குமான ஒரு தேசியப் பயணமாகும். எவ்விதத் தடைகள் வரினும், இந்த மக்கள் சக்தியைக் கொண்டு சர்வஜன அதிகாரம் கட்சியை நோக்கி நாட்டின் அரசியலை நாம் நகர்த்துவோம் என்றார்.





