மின்சாரசபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சுகயீன விடுமுறை
அரசாங்கம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் ஊடாக மின்சார பாவனையாளர்களுக்கோ மின்சாரசபை ஊழியர்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. இன்றைய தினத்துக்குள் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக மின்சாரசபையின் சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் பிரபாத் பிரியந்த தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் ஊடாக மின்சார பாவனையாளர்களுக்கோ மின்சாரசபை ஊழியர்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் தற்போது மின்சாரசபையை 6 பங்குகளாக பிரித்து, அடுத்துவரும் ஓர் இரண்டு வருடங்களில் இது தனியார் மயமாகும் வகையில் 25, 30 பங்குகளாக பிரிக்கப்படும். அவ்வாறானதொரு மறுசீரமைப்பே தற்போது முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த மின்சாரசபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலத்தை முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கொண்டுவரும்போது, இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை பத்தவைத்து, கிழித்தெரிந்து, புதிய சட்டமூலம் கொண்டுவருவதாக தெரிவித்த இந்த அரசாங்கம், தற்போது அந்த சட்டமூலத்தில் சில வசனங்களை மாற்றம் செய்து, காஞ்சன விஜேசேகர கொண்டுவந்த சட்டமூலத்தையே மீண்டும் கொண்டுவந்திருக்கிறது.
மின்சாரசபை சட்டமூலம் ஒன்றை தயாரிக்க முடியுமான அறிவுடைய யாரும் இந்த அரசாங்கத்தில் இல்லையா என கேட்கிறோம். மின்சக்தி அமைச்சர் மின்சார சபை தொழிற்சங்கம், ஊழியர்களுக்கு முகம்கொடுப்பதில்லை, கலந்துரையாட இடமளிப்பதில்லை, கடிதங்களுக்கு பதிலளிக்காமல், வேறு சிலருக்கு இந்த நடவடிக்கையை கையளித்துவிட்டு மறைந்து செயற்படுகிறார்.
அதனால் மின்சாரசபை ஊழியர்கள் சுகயீன விடுறை அறிவித்துவிட்டு இன்று காலை 10 மணிக்கு கொழும்புக்கு வர தீர்மானித்திருக்கிறது. சேவை பாதுகாப்பு, மின்சார பாவனையாளர்களை எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையிலான சட்டபூர்வ ஒப்பந்தம் ஒன்றுக்கு மின்சாரசபை ஊழியர்களுடன் வரவேண்டும் என்றே நாங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கிறோம். அரசாங்கம் முறையான பதில் ஒன்றை வழங்காவிட்டால் இன்று மாலையாகும்போது எமது தொழிற்சங்க போராட்டத்தை மேலும் தீவிரமாக்குவோம் என்றார்.