தென்னக்கோன் அனைத்துக்குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளி: சபாநாயகர் அறிவிப்பு
நீதிபதி நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏகநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாகப் பணியாற்றினர்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார்.
பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அதனை நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியபோது, சபாநாயகரின் அறிவிப்பின்போதே சபாநாயகர் இதனை சபைக்கு அறிவித்தார்.
சபாநாயகர் தொடர்ந்து குறிப்பிடுகையில், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று விசாரணைக் குழு ஒருமனதாக முடிவு செய்து, அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளது. இதேவேளை, குறித்த அறிக்கையை அச்சிட்டு பாராளுமன்ற இணையத்தளத்தில் வெளியிடவும் மும்மொழிகளில் எம்.பி.க்களுக்கு வழங்கவும் கோரிக்கை விடுக்கிறேன்.
பொலிஸ்மா அதிபராகவிருந்த தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை தயாரிக்க கடந்த ஏப்ரல் மாதம் விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன குழுவின் தலைவராக பணியாற்றினார்.
நீதிபதி நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏகநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாகப் பணியாற்றினர். இந்த விசாரணைக் குழு 10 தடவைகளுக்கு மேல் கூடி, சாட்சியங்களைச் சேகரித்தது.
மேலும், 2025 ஜூலை 16 முதல் தினமும் கூடி, சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது. இதன்படி, விசாரணைக் குழுவின் சாட்சியப் பதிவு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.