மூன்றில் இரண்டுக்கு அண்ணளவான மக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவு
இந்த மதிப்பீட்டின்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் திறமையான ஆட்சியை வழங்க முடியும் என்று 62.8 சதவீத மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகச் செயற்பாடுகளில் திருப்தியடைந்துள்ள அதேவேளை, மூன்றில் இரண்டுக்கு அண்ணளவான மக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் சமூகக் குறியீட்டு பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் 2026 மே 23 முதல் ஜூன் 18 வரை நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி 1,240 நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த நாடு தழுவிய ஆய்வின்படி, ஜனாதிபதியின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் 75.5 சதவீதத்துக்கும் அதிக மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. இதற்கு நிகராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் செயல்பாடுகள் குறித்து 29.4 சதவீத மக்களே திருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி, மதிப்பீட்டுக்கு உள்ளானவர்களில் 64.1 சதவீதத்தினர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்தச் செயற்பாட்டை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று 23.6 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
40.5 சதவீதத்தினர், தாங்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஆதரவாக இருந்தாலும், அது தற்போது நாட்டின் உடனடி முன்னுரிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் நூற்றுக்கு 23 சதவீதத்தினர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு நேரடியாகத் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தற்போதைய ஆட்சியின் மீது அரசியல் ரீதியான ஆதரவு உயர் மட்டத்தில் இருந்தாலும், பொருளாதாரத் துறையில் தொடர்ந்தும் கடுமையான அழுத்தம் நிலவுவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னிருந்த நிலையை விட, தங்கள் வீட்டுப் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக பதிலளித்தவர்களில் 51.4 சதவீதத்தினர் கூறியுள்ளனர். அதேவேளை, நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதாகக் கூறியவர்கள் 18.2 சதவீதமான சிறிய பிரிவினராகும்.
மேலும், அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும் விதம் குறித்து மக்களின் கருத்துக்கள் சமமாகப் பிரிந்து சென்றுள்ளன. இதில், அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் 45.3 சதவீதத்தினர் திருப்தியடைந்துள்ள அதேவேளை, 44.0 சதவீதத்தினர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இந்த மதிப்பீட்டின்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் திறமையான ஆட்சியை வழங்க முடியும் என்று 62.8 சதவீத மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, அண்மையில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து அரசாங்கம் முன்னெடுத்த நிவாரணப் பணிகள் மற்றும் புனரமைப்புச் செயற்பாடுகள் குறித்து 68.6 சதவீதமான மிக அதிக மக்கள் ஆதரவு பதிவாகியுள்ளது. இதற்கு மேலதிகமாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து 51.6 சதவீத மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





