மட்டக்களப்பில் 'தமிழர் தேசத்தின் கரிநாள்' மாபெரும் கவனயீர்ப்பு
வெள்ளைப்பாலத்திற்கு அருகில் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டு அவ்விடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கரிநாளா பிரகடனப்படுத்தி பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் போராட்டத்தினை 04-02-2026அன்று முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மட்டக்களப்பு காந்திபூங்காவரையில் ஊர்வலம் செல்ல ஆயத்தமான நிலையில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு ஊர்வலத்தினை தடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் காந்திபூங்காவில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுவதன் காரணமாக அங்கு செல்லமுடியாதென பொலிஸார் தடைகளை ஏற்படுத்தினர்.
எனினும் தமது போராட்டம் வழமையாக காந்திபூங்காவில் நிறைவடைவதனால் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு காணாமல்போனவர்களின் உறவினர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டன.
எனினும் அங்குசெல்வதற்கு அனுமதிக்கமுடியாது என பொலிஸார் தெரிவித்த நிலையில் கல்லடி பாலத்தில் ஆரம்பித்து தனியார் பஸ் நிலையத்தில் போராட்டத்தினை முடிப்பது என பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து வருகைதந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறவினர்கள்,பொது அமைப்புகள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கல்லடி பாலத்திலிருந்து பல்வேறு கோசங்களுடன் பேரணியானது நினைவு ஊர்தியுடன் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு திருகோணமலை வீதியுடாக மட்டக்களப்பு நகர் நோக்கிசென்றபோது வெள்ளைப்பாலம் அருகில் பொலிஸாரினால் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு போராட்டக்காரர்கள் மறிக்கப்பட்டு புதுப்பாலம் ஊடாக பேரணியானது செல்லுமாறு பணிக்கப்பட்டது.
எனினும் தாங்கள் தமது போராட்டத்தினை நகர் ஊடாகவே செல்வோமென வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில்சமூக பிரதிநிதிகள் பொலிஸாருடன் முரண்பட்டு தள்ளுப்பட்ட நிலையில் பொலிஸார் அப்பகுதி ஊடாக செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளைப்பாலத்திற்கு அருகில் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டு அவ்விடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைகழக மாணவர்களினால் கரிநாள் பிரகடனம் வாசிக்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
காணமலாக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும், வடகிழக்கின் படுகொலைகளுக்கு நீதி வேண்டும்,திட்டமிட்ட நில அபகரிப்புகளை நிறுத்து, தமிழர்களை அடக்கியொடுக்குவதை நிறுத்து, ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிகொடு, காணமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே, திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்து போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டன.
கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் கூட இல்லாத நெருக்கடிகள் இன்றைய அநுர ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கருத்து வெளியிட்டதோடு ஒருபோராட்டாம் சுதந்திரமாக நடத்தமுடியாத எங்களுக்கு இந்த நாட்டில் ஒவ்வொரு தேசிய சுதந்திர தினமும் கரிநாள் தான் என்று மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் கவலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.





