கோப், கோபா அறிக்கைகள் தொடர்பில் தீர்மானம்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 (4) இன் ஏற்பாடுகளுக்கு அமைய சட்டமா அதிபர் அவதானிப்புகள் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) ஆகியவற்றினால் பல்வேறு நிறுவனங்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் குறித்த விடயங்கள் அடங்கியதாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை சட்டமா அதிபர் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஆற்றுப்படுத்துவது தொடர்பான தீர்மானங்கள் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் 21-07-2026அன்று நடைபெற்ற அமர்வின் போது இவ்விரு குழு அறிக்கைகள் தொடர்பில் விவாதம் இடம்பெற்றதன் பின்னர் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வெளிநாட்டுப் பணமனுப்பல்களின் பிரகாரம், வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்குரியதாக 2022 மே 01ஆம் திகதி தொடக்கம் 2023 செப்டம்பர் 15ஆம் திகதி வரை அமல்படுத்தப்பட்ட உத்தேச திட்டம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா) முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2025 அக்டோபர் 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 (4) இன் ஏற்பாடுகளுக்கு அமைய சட்டமா அதிபர் அவதானிப்புகள் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அத்துடன், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட சம்பவங்கள் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகளுக்கு அமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு ஆற்றுப்படுத்துவது தொடர்பான தீர்மானத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை,ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலை சபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு,இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம்,இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை,லங்கா சதொச லிமிடெட்,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தேசிய சேமிப்பு வங்கி ஆகிய நிறுவனங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளன.
2026.04.07 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையியற் கட்டளை 119(4) மற்றும் 120 (4) ஆகியவைகள் தொடர்பான திருத்தங்களின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.





