ஸ்டிக்கர்களை ஒட்டுவதால் ஒரு மதுபான போத்தல் விற்பனையின் போது 2200 ரூபாவை அரசு இழக்கிறது
பாதுகாப்பு ஸ்டிக்கர் முறைமையின் செலவு, அதன் தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெறும் பொருளாதார நன்மைகள் குறித்து குழு விரிவான கவனத்தைச் செலுத்தியது.
முறையான தரம் இல்லாத ஸ்டிக்கர்களை ஒட்டுவதால் ஒரு மதுபான போத்தல் விற்பனையின் போது 2200 ரூபாவை அரசு இழக்கிறது. மதுபான துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஒருமாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷடி சில்வா இலங்கை மதுவரி திணைக்களத்துக்கு அறிவுறுத்தினார்.
மதுபானப் போத்தல்களில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர் முறைமையை மேலும் திறமையாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றுவதன் அவசியத்தை அரசாங்க நிதி பற்றிய குழு வலியுறுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது. மதுபானப் போத்தல்களில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர் முறைமை, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி சட்டத்தின் கீழ் 'ஷ்ரம வாசனா நிதியத்தை' கலைப்பது தொடர்பான விடயங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
பாதுகாப்பு ஸ்டிக்கர் முறைமையின் செலவு, அதன் தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெறும் பொருளாதார நன்மைகள் குறித்து குழு விரிவான கவனத்தைச் செலுத்தியது. வரி விதிக்கப்படாத மதுபானப் பயன்பாட்டைக் குறைக்கவும், கலால் வருவாயைப் பாதுகாக்கவும்,போலி மதுபானங்களின் புழக்கத்தைத் தடுக்கவும் 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைவாக இம்முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதற்கான ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டில் இந்திய நிறுவனமான மெட்ராஸ் செக்யூரிட்டி பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
அதிவேக மதுபான உற்பத்திச் செயல்முறைகளில் இயற்பியல் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிரமங்கள் குறித்தும் குழு கலந்துரையாடியது. அதற்கமைய, டிஜிட்டல் (இங்க்ஜெட்) குறியீட்டு அச்சிடலைப் பயன்படுத்துவதற்கு 2021 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது. 1,000 அச்சிடப்பட்ட காகித ஸ்டிக்கர்களுக்கு அறவிடப்படும் அதே 5.99 அமெரிக்க டொலர் கட்டணமே டிஜிட்டல் குறியீட்டு அச்சிடலுக்கும் அறவிடப்படுவதை குழு சுட்டிக்காட்டியது.
போத்தல் அடைக்கும் தொழிற்சாலைகளில் ஸ்டிக்கர் அச்சிடும் இயந்திரங்களுக்கான ஆரம்பக் கட்டமைப்புச் செலவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தாலும், காகித ஸ்டிக்கரை விட டிஜிட்டல் ஸ்டிக்கரின் செலவு பொதுவாக குறைவாகவே இருக்கும். எனவே, தற்போதைய செலவு அமைப்பு மற்றும் அரசாங்கத்திற்கு கிடைக்கும் நன்மைகளை மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.
பாதுகாப்பு ஸ்டிக்கர் முறைமைக்கு சர்வதேச ஐ.எஸ்.ஒ தரநிலைகளை உரிய முறையில் பின்பற்றுதல், உற்பத்தியிலிருந்து நுகர்வோர் வரை மதுபானப் பொருட்களின் நகர்வைக் கண்காணிக்கும் 'ட்ராக் அண்ட் ட்ரேஸ்' முறைமையை அறிமுகப்படுத்துதல் மற்றும் மொபைல் செயலி மூலம் பொருட்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க நுகர்வோருக்கு வசதிகளை வழங்குதல் ஆகியவற்றின் அவசியத்தையும் குழு விவாதித்தது.
புதிய விலைமனுகோரல் நடைமுறையானது விலையை மட்டுமன்றி தரம், தரவு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது. மேலும், போலி ஸ்டிக்கர்கள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்கு, டெண்டர் மதிப்பீட்டுச் செயல்பாட்டில் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பிற நாடுகள் பின்பற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைக் கண்டறிந்து, குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு கலால் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட புதிய ஒழுங்குவிதிகள் குறித்தும் குழு பரிசீலித்தது. 2026 ஜூலை 10 ஆம் திகதியிட்ட 2496ஃ38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஒழுங்குவிதிகள், முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதைத் தடை செய்கின்றன. பொறுப்பான வர்த்தகம் மற்றும் சர்வதேச தொழிலாளர் தரநிலைகளுக்கு அமைவாகச் செயற்படுவதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் காரணமாக, 2026 ஜூலை 23 அன்று நிறைவடைந்த ஐக்கிய அமெரிக்காவின் 'பிரிவு 301' இன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய உழைப்பு தொடர்பான வரி நடவடிக்கைகளில், ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட 12.5 சதவீத பிரிவிற்குப் பதிலாக குறைந்த மற்றும் சாதகமான 10 சதவீத பிரிவில் இலங்கை சேர்க்கப்பட முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட 'ஷ்ரம வாசனா நிதியத்தை' கலைப்பது தொடர்பான விடயங்கள் குறித்தும் குழு ஆராய்ந்தது. 1998 ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு, 2019 ஆம் ஆண்டின் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட இந்நிதியம், தற்போதைய சூழலுக்குப் பொருத்தமற்றமை, போதிய செயல்திறனின்மை மற்றும் அதன் சொத்துக்கள் போதியளவு பயன்படுத்தப்படாமை காரணமாக கலைக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிதியம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அதன் அத்தியாவசிய சேவைகள் தொழிலாளர் அமைச்சின் ஊடாகத் தொடர்ந்து வழங்கப்படும் என அதிகாரிகள் குழுவுக்கு விளக்கிப் கூறினர். இதன் மூலம் தனித்துவமான நிறுவனக் கட்டமைப்பைப் பராமரிப்பதற்கான செலவு குறைவதுடன், பொது வளங்களை மேலும் திறம்படப் பயன்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





