பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் சந்திப்பு
இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான உறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்தி, இருதரப்புப் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய, சர்வதேச பங்காளிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் ஜோசப் சிகேலாவுடன் கலந்துரையாடியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் - குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, உலகப் பொருளாதார மன்றத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார்.
இதன்போது, சர்வதேச பங்காளிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் ஜோசப் சிகேலாவுடனும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபட்டார். இதன் போதே இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்தி, இருதரப்புப் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டு மையத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவர் மசாடோ கான்டாவை சந்தித்தார். இதன்போது இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான உறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, மென்சீஸ் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஹசன் எல் ஹூரியுடனான சந்திப்பின்போது, பிரதமர் விமானப் போக்குவரத்துச் சேவைகள் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார். உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டங்களுக்கு இணையாக டாவோஸ், பிஸ் புய்னில் நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா மன்றத்தின் உயர்மட்டக் கலந்துரையாடலிலும் பிரதமர் பங்குபற்றியுள்ளார்.





