இலங்கையின் கட்டுமானத்துறையில் முதலாவது 'தீ பாதுகாப்பு பொறியியல் ஆய்வு மையம்'
வெப்ப படம்பிடி ஒளிப்படக்கருவிகள் மூலம் சோதனையின் போது ஏற்படும் வெப்பப் பரவல் மற்றும் வெப்பக் குவிவுப் புள்ளிகள் துல்லியமாகப் படம்பிடிக்கப்படுகின்றன.
இலங்கையின் கட்டுமான மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் பாதுகாப்புத் தரத்தை உலகளாவிய நிலைக்கு உயர்த்துவதற்கான ஒரு வரலாற்று மைல்கல்லாக, நாட்டின் முதலாவது 'தீ பாதுகாப்பு பொறியியல் ஆய்வு மையம்' ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நிறுவப்பட்டுள்ளது. இந்த அதிநவீன ஆய்வு மையத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று முன்தினம் மத்தேகொடவில் அமைந்துள்ள பொறியியல் பீட வளாகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இலங்கையில் இதுவரை கட்டிடக் கட்டுமானப் பொருட்களின் தீ தடுப்புத் திறனைச் சோதிப்பதற்கான பிரத்தியேக வசதிகள் இருக்கவில்லை. இதன் காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் கட்டிட வடிவமைப்பாளர்கள் தமது தயாரிப்புகளை வெளிநாட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பிச் சோதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
. இதனால் அதிக செலவு, காலதாமதம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் பாரிய தடைகள் நிலவி வந்தன. இந்த தேசியத் தேவையை உணர்ந்து, சுமார் 250 மில்லியன் ரூபாய் முதலீட்டில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.எம்.சி. கொண்டசிங்க அவர்களின் வழிகாட்டலில் இந்த ஆய்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு மையத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, 'முழு அளவிலான தீ சோதனை உலை' திகழ்கிறது. இதன் மூலம் 3 மீற்றர் நீளம் மற்றும் 3 மீற்றர் ர் அகலமுடைய சுவர்களையும், 4 மீற்றர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலமுடைய தளங்களையும் நேரடியாக தீக்கு உட்படுத்தி ஆய்வு செய்ய முடியும்.
அத்துடன் தூண்கள் மற்றும் கிடைமட்டத் தூண்கள் (பீம்கள்) போன்ற கட்டுமானக் கூறுகளையும் 3 மீட்டர் நீளம் வரை இங்கு சோதிக்க முடியும். பாரம் தாங்கும் மற்றும் பாரம் தாங்காத என இரு வகையான சோதனைகளும் இங்கு முன்னெடுக்கப்படுவதுடன், இவை அனைத்தும் உலகளாவிய தரக்கட்டளைகளுக்கு இணங்க அமைந்துள்ளன.
இம்மையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன உபகரணங்கள் கட்டுமானப் பொருட்களின் வெப்பக் கடத்துத்திறனை 750 பாகை செல்சியஸ் வரையிலும், இதர பண்புகளை 1200 பாகை செல்சியஸ் வரையிலும் துல்லியமாக அளவிடும் திறன் கொண்டவை. ஒரேகால வெப்பப் பகுப்பாய்வு கருவி மூலம் பொருட்களின் எடை இழப்பு மற்றும் வெப்ப மாற்றங்கள் ஒரே நேரத்தில் கண்காணிக்கப்படுகின்றன.
மேலும், வெப்ப படம்பிடி ஒளிப்படக்கருவிகள் மூலம் சோதனையின் போது ஏற்படும் வெப்பப் பரவல் மற்றும் வெப்பக் குவிவுப் புள்ளிகள் துல்லியமாகப் படம்பிடிக்கப்படுகின்றன. இவை தவிர, 'வரையறுக்கப்பட்ட உறுப்புப் பகுப்பாய்வு' நுட்பங்களைப் பயன்படுத்தி, சிதைவுச் சோதனைகளை மேற்கொள்ளாமலேயே கட்டிடங்களின் பாதுகாப்புத் தன்மையை முன்கூட்டியே கணிக்க முடியும்.
இந்தத் தேசிய முன்னெடுப்பிற்குச் சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் தமது தொழில்நுட்பப் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இது இலங்கையின் கட்டுமானப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், வெளிநாடுகளுக்குச் செல்லும் பாரியளவு அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் வழிவகுக்கும் என எதிபார்க்கப்படுகிறது.





