துசித ஹல்லொலுவவை கைது செய்வதற்கு நடவடிக்கை
துசித ஹல்லொலுவ வசிக்கும் வீட்டிற்கும் கொழும்பு குற்றப்பிரிவின் ஒரு குழு சென்றுள்ளது, ஆனால் அவர் தற்போது அங்கு இல்லை என்று காவல்துறை கூறுகிறது.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளருமான துசித ஹல்லொலுவவை கைது செய்வதற்குக் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துசித ஹல்லொலுவ மற்றும் அவரது சட்டத்தரணி பயணித்த வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் ஆவணம் திருடப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது அவரது இல்லத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாகக் கொழும்பு குற்றப்பிரிவு கூறுகிறது.
துசித ஹல்லொலுவ வசிக்கும் வீட்டிற்கும் கொழும்பு குற்றப்பிரிவின் ஒரு குழு சென்றுள்ளது, ஆனால் அவர் தற்போது அங்கு இல்லை என்று காவல்துறை கூறுகிறது.
துசித ஹல்லொலுவ அடிக்கடி செல்லும் பல இடங்களுக்கு கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் சென்ற போதும், அவர் அந்த இடங்களுக்கும் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர், உந்துருளி சாரதி மற்றும் இருவரையும் வழிநடத்திய பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு குற்றப்பிரிவு கூறுகிறது.
தொழில்நுட்ப விசாரணைகள் உள்ளிட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் துசித ஹல்லொலுவவை கைது செய்ய புலனாய்வுப் பிரிவுகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





