திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் மத உரிமைகள் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு
'மாணவிகள் அவர்களது மத சுதந்திரத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, அவர்களது பரீட்சை முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுப் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர்.
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய பாதிக்கப்பட்ட மாணவிகள் 70 பேரின் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்திவைக்கப்பட்ட சம்பவத்தில், அம்மாணவிகளின் மதம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் மீறப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டு திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் கல்விபயின்று, க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள், அவர்கள் காதை மறைக்கும் விதமாக ஹிஜாப் அணிந்துவந்து பரீட்சை விதிகளை மீறியதாகக் காரணம் குறிப்பிட்டு இடைநிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் அக்காலப்பகுதியில் மதசுதந்திரம் தொடர்பில் பல்வேறு கரிசனைகளைத் தோற்றுவித்திருந்தது. இதுகுறித்து அவ்வேளையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தன்னார்வ அடிப்படையில் அவதானம் செலுத்தியிருந்தது.
அதற்கமைய இச்சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய பாதிக்கப்பட்ட மாணவிகளின் மதம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றும் சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் பாதுகாப்புக்கான உரிமை, பாகுபாடின்றி நடத்தப்படுவதற்கான உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மீறியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோன்று பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளின் இன மற்றும் மத அடையாளத்தை அடிப்படையாகக்கொண்டு அவர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமித் ஜயசுந்தரவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அந்த மாணவிகளுக்கு மாத்திரமன்றி அவர்களைச் சார்ந்த சமூகத்துக்கு எதிரான சூழலொன்று உருவாவதற்குப் பங்களிப்புச்செய்யக்கூடும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, 'பரீட்சையின்போது மாணவிகள் சால்வை போன்ற துணி மூலம் தலையை மறைத்திருந்தமை மத நம்பிக்கை என்ற வரைiறைக்குள் அடங்குவதுடன், அது அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)(இ) இன் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்தை வெளிப்படுத்துவதன் ஓரங்கமாகும். நீண்டகாலமாக மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதிக்கப்பட்ட வரலாறு இலங்கைக்கு உண்டு. அந்தவகையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மாணவிகள் அணிந்திருந்த ஆடை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட மத அல்லது நம்பிக்கை சுதந்திரத்தின் வரையறைக்குள் உள்ளடங்குகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை' என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும் 'மாணவிகள் அவர்களது மத சுதந்திரத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, அவர்களது பரீட்சை முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுப் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். எனவே இதனூடாக அமித் ஜயசுந்தர மாணவிகளின் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடு விதித்துள்ளார்' என்றும் ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் மாணவிகள் பரீட்சை விதிகளை மீறியுள்ளனர் என வெளியக மேற்பார்வையாளர் ஒருவர் ஏன் முறைப்பாடு செய்தார் என்பது குறித்து நடுநிலையான விசாரணைகளை முன்னெடுத்தல், பரீட்சை விதிகள் மாணவர்களினது மத நம்பிக்கையைத் தடுக்கும் வகையில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதைத் தெளிவுபடுத்தி சுற்றறிக்கை ஒன்றை வெளியிடல், எதிர்வருங்காலங்களில் பரீட்சை நிலையங்களுக்கு தமிழ்பேசும் பெண் மேற்பார்வையாளர்கள் போதிய எண்ணிக்கையில் பணிக்கு அமர்த்தப்படுவதை உறுதிசெய்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.





