நாட்டில் விபத்துக்களில் சிக்கி 1,693 பேர் உயிரிழப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர
இறுதியில் விபத்துக்குள்ளாகி உயிரிபாத்தோ அல்லது அங்கவீனர்களாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஜனவரி முதல் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,605 உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய பாரிய விபத்துக்கள் சம்பவித்துள்ளதோடு, அவ்விபத்துகளில் சிக்கி 1,693 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப்பிரிவில் 13-08-2026 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில், "இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,605 உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய பாரிய விபத்துக்கள் சம்பவித்துள்ளதோடு, அவ்விபத்துகளில் சிக்கி 1,693 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் பாரதூரமான விபத்துக்கள் 3,125 இடம்பெற்றுள்ளதோடு, 6,478 சிறு விபத்துகளும், 2,388 சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடிய விபத்துகளும் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது வாகன விபத்துகளின் எண்ணிக்கை 79 ஆலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 88 ஆலும் உயர்வடைந்துள்ளது.
எவ்வாறெனினும் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் பலனாக தற்போது விபத்துகளின் எண்ணிக்கையை 20 சதவீதமாக குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது.
மேலும் விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகளும், 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும்,119 பேர் பின்னால் அமர்ந்து பயணித்தவர்களும், 115 பேர் சைக்கிள் செலுத்துநர்களும், 136 சாரதிகளும், 162 பயணிகளும் அடங்குகின்றனர்.
குறிப்பாக நாட்டில் மோட்டார் சைக்கிள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணமுடிகிறது. இளைஞர்கள் அதிக வேகத்துடனும், அதிக சத்தத்துடனும் வீதியில் மோட்டார் சைக்கிள்களை செலுத்துகின்றனர். பெற்றோரும் பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் மோட்டார் சைக்கிள்களை பரிசாக வழங்குகின்றனர். இவ்வாறான செயல்களைத் தவிர்க்குமாறு கோருகிறேன். 18, 20, 22 வயதுடைய இளம் வயதினர் பாரதூரத்தை உணராது அதிக வேகத்துடனும், சைலன்ஸர்களை மாற்றியமைத்து அதிக சப்தத்துடனும் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இறுதியில் விபத்துக்குள்ளாகி உயிரிபாத்தோ அல்லது அங்கவீனர்களாக வேண்டிய நிலை ஏற்படலாம். பாரதூரமான விபத்துகளின் போது சிலருக்கு முதுகு தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டு நடைபினமாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் பயணத்துக்காக நாம் பயண்படுத்தும் வாகனம், அதைக்கொண்டு பந்தையங்கள்,சாகசங்களில் ஈடுபட வேண்டாம். சாரதி அனுமதிபத்திரமின்றி வாகனம் செலுத்தும் நபர்களுக்கு எதிராகவும் குறித்த வாகன உரிமையாளருக்கு எதிராகவும் எவ்வித பாரபட்சமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





