நாமே மக்களை கவனத்து கொள்ளும் ஒரு அரசாங்கம்: ஜனாதிபதி அநுரகுமார
இந்த கல்வி முறை கருணை, மனப்பாங்கு மற்றும் இரக்க குணம் கொண்ட எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஒரு கல்வி முறையாகும்.
பொருளாதாரத்தையும் மக்களைக் கவனித்துக் கொண்டு நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் மிகவும் திட்டமிட்ட முறையிலும் முறையாகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். நாட்டில் மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஒரு அரசாங்கம் என்றால் அது தற்போதுள்ள அரசாங்கமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தின் ரிதீகம, மாவதகம, மல்லவபிட்டிய, இப்பாகமுவ மற்றும் கணேவத்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்ட அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு 10-01-2026 அன்று ரிதீகம, தொடம்கஸ்லந்த இளைஞர் படையணி நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, அனர்த்தத்துக்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னர் காணப்பட்டதை விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் திறன் காணப்படுகிறது. அதற்காக இந்த ஆண்டு 50 000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்துக்கு பின்னர் நாடும் மக்களும் மிக விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது என்று சிலர் கூறினாலும், தற்போது சேதமடைந்த அனைத்து வீதிகளையும் மீண்டும் திறந்து, தொடர்பாடல், மின்சாரம் மற்றும் நீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுத்து மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்காக இரவும் பகலும் உழைத்த அரச அதிகாரிகளின் பங்களிப்பை பாராட்டுகின்றேன். அனர்த்ததை எதிர்கொள்வதில் அரச பொறிமுறை நாட்டுக்கும் மக்களுக்கும் அதன் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது. நாட்டு மக்களுக்கு நமது அரச பொறிமுறை பற்றி சிறந்த புரிதல் இல்லை என்பது எமக்குத் தெரியும். ஆனால் இந்த அனர்த்தத்தின் போது, நமது அரச அதிகாரிகள் நாட்டுக்காகவும் மக்களுக்காவும் எவ்வளவு அரப்பணிப்புடன் செயற்படுகிறார்கள் என்பதை நிரூபித்தனர். பல அதிகாரிகள் இரவும் பகலும் உழைத்தனர். மக்களும் அதற்காக முன்வந்தனர். அந்த அர்ப்பணிப்பின் விளைவாக, நாம் கணிசமான அளவுக்கு மீண்டு வந்துள்ளோம்.
ஆனால் இந்தப் பேரழிவு நமது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டின் பொருளாதாரம் இதற்கு முன்பு ஒரு பாரிய நெருக்கடியைச் சந்தித்தது என்பதை அனைவரும் அறிவோம். அந்த நெருக்கடியின் விளைவுகளை நாம் அனைவரும் எதிர்கொண்டோம். மின்சாரம், எரிபொருள், எரிவாயு, பால் மா போன்றவை கிடைக்கவில்லை. முழு நாடும் வீழ்ச்சியடைந்தது. அத்தகைய பொருளாதார நெருக்கடி இயற்கை பேரழிவால் உருவாகவில்லை. இந்த பொருளாதார நெருக்கடிகள் கடந்த ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டவையாகும்.
எனவே தான் கடந்த தேர்தல்களில் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து எம்மிடம் ஆட்சியைக் கையளித்திருக்கின்றனர். மோசடி மற்றும் ஊழலற்ற அரசாங்கம், ஊழல்வாதிகளையும் மோசடிக்காரர்களையும் தண்டித்தல், சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல் மற்றும் இளைஞர்களை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுதல் அந்த இலக்குகளில் முக்கியமானவையாகும். அனைவரும் வாழ்வதற்கு போதுமான வருமான ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே முக்கிய காரணியாக அமையும். அந்த இலக்கை நோக்கி நாம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு பணிகளைச் செய்து முடித்துள்ளோம்.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே இவ்வாறானதொரு பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அந்தப் பேரழிவை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை முன்பை விட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்ப நமக்கு வலிமை இருக்கிறது. அதற்காக இந்த ஆண்டு 50,000 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம். பொருளாதாரத்தை வலுப்படுத்தினால் மட்டுமே அந்த வலிமை வரும். கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை இதை விட சிறப்பாக இருக்க வேண்டும். சரியாக உணவு உண்ணாதவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். தலைமுறை தலைமுறையாக நல்ல வீடு இல்லாதவர்கள் இருக்கிறார்கள். நம் நாட்டு மக்கள் இப்படி வாழக்கூடாது. 70-80 ஆண்டுகால வாழ்க்கையில் எல்லோரும் மனிதனாக வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும்.
எனவே, இந்தப் பொருளாதாரத்தையும் மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஒரு நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் மிகவும் திட்டமிட்ட முறையிலும் முறையாகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். நாம் அதைச் செய்ய வேண்டும். நாம் அதைச் செய்யாவிட்டால், யாரும் அதைச் செய்ய மாட்டார்கள். கடந்த 76 ஆண்டுகளில் அதைச் செய்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. நாட்டில் மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஒரு அரசாங்கம் இருந்தால், அது இந்த அரசாங்கம்தான். அதனால்தான் பேரழிவை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டன. இவ்வளவு பாரிய தொகை இதற்கு முன்பு ஒதுக்கப்பட்டதில்லை.
நம் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த, முதலில் அனைவருக்கும் நல்ல வருமான ஆதாரத்தை வழங்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு தரமான கல்வியையும் வழங்க வேண்டும். நம் கிராமங்களின் பிள்ளைகள் எதிர்காலத்தை வெல்வதற்கான ஒரே வழி கல்விதான் என்பதை நாம் அறிவோம். நம் தாய்மார்கள் மற்றும் தந்தையர் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் நமது கல்வி முறை நல்ல பலனைத் தருவதில்லை. இந்தக் கல்வி முறை நம் பெற்றோருக்கு ஒரு சுமையாக உள்ளது. இது பிள்ளைகளுக்கு துயரமாகவும் உள்ளது.
இலங்கையில் 50க்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட சுமார் 1150 பாடசாலைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை பாடசாலைகள் ஆக இருக்காது. பிள்ளைகள் இலக்கிய விழாவையோ அல்லது விளையாட்டு விழாவையோ நடத்த முடியாது. அந்தப் பாடசாலைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எனவே, நல்ல, அதிக பிள்ளைகளைக் கொண்ட, பிள்ளைகள் ஒன்றாக சேர்ந்து கல்வி கற்கும் ஒரு புதிய பாடசாலை கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.
கிராமப் பாடசாலையை பழைய பாடசாலையாக பாதுகாப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தைப் பறித்த இந்தக் கல்வி முறை மாற வேண்டும். அப்படியானால், நாம் ஒரு சிறந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது, பொருத்தமற்ற அல்லது நோக்கமற்ற விடயங்கள் ஊடகங்கள் மூலம் பரப்பத் தொடங்கியுள்ளன.
இலவசக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், அதை எதிர்த்துப் போராடினார்கள். இந்த முறையும் அவ்வாறுதான். இது ஒரு சிறந்த கல்வி சீர்திருத்தம், நம் பிள்ளைகளைப் பராமரிக்கும் கல்வி. நம் பிள்ளைகளை உலகத்துடன் ஒருங்கிணைக்கக்கூடிய கல்வி முறை. மேலும், நம் பிள்ளைகள் ஆளுமை மற்றும் தலைமைத்துவத்துடன் முன்னேற வழிவகுக்கும் ஒரு கல்வி முறை. இயந்திரங்களை உருவாக்கும் அல்லது கருணை, ஆன்மீகம் அற்ற பெற்றோர்களையோ, ஆசிரியர்களையோ, மதத் தலைவர்களை அறியாத பிள்ளைகளை உருவாக்கும் கல்வி அல்ல. அத்தகைய கல்வியினால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.
இந்த கல்வி முறை கருணை, மனப்பாங்கு மற்றும் இரக்க குணம் கொண்ட எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஒரு கல்வி முறையாகும். யார் என்ன சொன்னாலும், அந்தக் கல்வி சீர்திருத்தங்கள் நமது கிராமங்களில் உள்ள அப்பாவி பெற்றோரின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு கல்வி முறையை உருவாக்கும். அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதைப் பற்றி கலந்துரையாடடுவோம். நாங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறோம் என்பதை உங்களுக்கு கூறுகிறோம். நாம் கல்வியை அழிக்கிறோம் என்று இங்கே உள்ள யாராவது நம்புகிறீர்களா? நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. நாம் தூரப்பிரதேச கிராமங்களில் பிறந்தோம். கல்வியின் மூலம் குறிப்பிட்ட இடம் நமக்குத் கிடைத்ததால் இன்று இந்தப் பொறுப்புகளை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
இல்லையெனில், எங்கள் குடும்பப் பின்னணி, எங்கள் கிராமப் பின்னணி எங்களை இங்கு கொண்டு வந்திருக்காது. கல்விதான் எங்களுக்கு வழி வகுத்தது. எனவே, தொலைதூர கிராமங்களில் பிறந்த நாம் முன்னேறுவதற்கு கல்வி வழி வகுத்தால், அந்தக் கல்விக்கு அழிவுகரமான பாதையை நாம் அமைக்க மாட்டோம். எங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்வி முறையை உருவாக்க விரும்புகிறோம் என்றார்.





