வன்னிமாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் காணி பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என காணி, நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 24-07-2025 அன்று காதர் மஸ்தான் எம்பி நிலையியற் கட்டளை 27/2 ன் கீழ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் காணி பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏனைய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படும் .
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 54,000 ஏக்கர் காணி, வவுனியா மாவட்டத்தில் 24,000 ஏக்கர் காணி மற்றும் மன்னார் மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட ஹெக்டெயார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
வன பாதுகாப்பு திணைக்களத்தால் அதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது.
தற்போது அது தொடர்பில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையே நடத்தப்பட்டுள்ளது என்பதால் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக மாவட்ட ரீதியில் குழுக்கல் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படும் என்றார்