தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் - சாணக்கியன்
நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வதையும், வழக்குத் தொடரல்களையும் விரைவுபடுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன ?
நியாயத்தன்மை, விகிதாசாரம் மற்றும் பாகுபாடின்மை ஆகிய கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, நீண்டகால தடுப்புக் காவல் வழக்குகளை மீளாய்வு செய்வதற்கான வழிமுறைகள் ஏதேனும் நடைமுறையில் உள்ளதா? நீண்டகாலமாக அல்லது ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு வசதி செய்வதில் அல்லது பரிந்துரைப்பதில் நீதி அமைச்சு என்ன பங்கு வகித்துள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-05-2026 அன்றுநடைபெற்ற அமர்வின்போது நிலையியற் கட்டளை 27/ 2 இன் கீழ் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: அரசியல் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் நபர்கள் சாதாரண குற்றவாளிகளாகக் கருதப்படாமல், அரசியல் கைதிகளாக நடத்தப்பட வேண்டும் என்பது பல நாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையாகும்.
ஐரோப்பிய கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளின்படி, ஒரு நபரின் தடுப்புக் காவல் என்பது முதன்மையாக அவரது அரசியல் நம்பிக்கைகள், செயல்பாடுகள் அல்லது அடையாளங்களிலிருந்து எழும் சந்தர்ப்பங்களிலும், குறிப்பாக அத்தகைய தடுப்புக் காவல் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலோ அல்லது விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட தண்டனை, அநீதியான அல்லது அரசியல் செல்வாக்கிற்கு உட்பட்ட சட்ட நடைமுறைகளின் விளைவாகவோ அமையும் பட்சத்தில், அவர் ஓர் அரசியல் கைதியாக புரிந்து கொள்ளப்படலாம்.
இலங்கையே இதற்கு ஒரு தெளிவான முன்னுதாரணத்தை வழங்குகிறது. கடந்த கால கிளர்ச்சிகளைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியுடன் தொடர்புடைய நபர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டதோடு, ஜனநாயக அரசியல் வாழ்க்கையிலும் அவர்கள் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களில் பலர் இன்று பொதுப் பதவிகளை வகிக்கின்றனர். அரசியல் மோதல்கள் என்பன, நீண்டகால தண்டனைக்குரிய தடுப்புக் காவலுக்குப் பதிலாக, அரசியல் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலமே கடந்த காலத்தில் தீர்க்கப்பட்டுள்ளன என்பதை இது காட்டுகிறது.
இருப்பினும், தமிழ் அரசியல் போராட்டத்துடன் தொடர்புடைய நபர்களைத் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்திருப்பதிலும், அவர்களை சட்டரீதியாக நடத்தும் விதத்திலும் ஒரு முரண்பாடு காணப்படுவதாகத் தெரிகிறது. இவர்களில் பலர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படுவதிலும் மற்றும் வழக்கு விசாரணைகளிலும் கடுமையான தாமதங்களை எதிர்கொண்டு, நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது சட்டத்தின் முன் சமநிலை, விகிதாசாரம் மற்றும் சமத்துவம் ஆகியவை தொடர்பான கடுமையான கவலையளிக்கிறது.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட, நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலையும், ஒவ்வொரு வழக்கினதும் தற்போதைய சட்ட நிலைமைகளையும் நீதி அமைச்சு வழங்குமா?
நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வதையும், வழக்குத் தொடரல்களையும் விரைவுபடுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன ? இவ்வாறான வழக்குகளில் நீதிமன்ற அமைப்பிற்குள் ஏற்படும் தாமதங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன,?
நியாயத்தன்மை, விகிதாசாரம் மற்றும் பாகுபாடின்மை ஆகிய கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, நீண்டகால தடுப்புக் காவல் வழக்குகளை மறுஆய்வு செய்வதற்கான வழிமுறைகள் ஏதேனும் நடைமுறையில் உள்ளனவா? நீண்டகால அல்லது ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு வசதி செய்வதில் அல்லது பரிந்துரைப்பதில் நீதி அமைச்சு என்ன பங்கைக் வகித்துள்ளது? அரசியல் கைதிகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன ? என்று கேள்வியெழுப்பினார்.
இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார போதுமான காலவகாசம் கோரினார்.





