உழவு இயந்திரத்தை நோக்கியே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்
கொடிக்காம் பொலிஸார் தெரிவிக்கையில், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை வழிமறித்த போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மோதுவது போன்று உழவு இயந்திரத்தை சாரதி செலுத்தினார்.
 
        
கொடிகாமத்தில் உழவு இயந்திரத்தில் கொண்டுவரப்பட்ட கிணறு வெட்டிய மண்ணை, வெள்ளம் தேங்கும் இடத்தில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீதே பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்தியதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொடிகாமம் பகுதியில் 24-10-2025 இரவு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில், அப்பகுதியை சேர்ந்த மாணிக்கவாசகர் மதுசன் (வயது 18) என்ற இளைஞரே படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில், படுகாயமடைந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கையில்,
கொடிகாமம் பகுதியில் கிணறு தோண்டப்படுகிறது, அங்கு சேர்ந்த மண்ணை, அருகில் உள்ள கடையொன்றின் முன்பாக வெள்ள நீர் தேங்கி நிற்பதனால், அவ்விடத்தில் அதனை கொட்டுவதற்காக உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து அவ்விடத்தில் கொட்டும் பணியை முன்னெடுத்திருந்த வேளையில் பொலிஸார் இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
பொலிஸார் அவ்விடத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. சந்தேகமெனில் அவர்கள் விசாரணைகளைச் செய்திருக்கலாம்.
தற்போது பொலிஸார் உழவு இயந்திரத்தில் தப்பி செல்ல முற்பட்டவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தோம் என்று பொலிஸார் கூறுகின்றனர். உழவு இயந்திரம் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய வாகனமா? அதில் மணலை ஏற்றியவாறு தப்பியோட முடியுமா?
உழவு இயந்திரத்தை துரத்தி சுடுவது எனில் பின் பகுதியில் இருந்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உழவு இயந்திரத்தின் பக்கவாட்டில் இருந்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவு இயந்திரத்தின் சில்லுகளில் பக்க வாட்டிலிருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன.
அதேவேளை படுகாயமடைந்த மதுசனின் இடுப்பிலும் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுகின்றன. நின்ற உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு , தப்பியோடியவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும். தந்தையை இழந்து தனது குடும்ப பாரத்தை சுமக்கும் 18 வயதான இளைஞன் மீதான பொலிஸாரின் வன்முறை தொடர்பில் நீதியை பெற்று கொடுக்க அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், கொடிக்காம் பொலிஸார் தெரிவிக்கையில், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை வழிமறித்த போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மோதுவது போன்று உழவு இயந்திரத்தை சாரதி செலுத்தினார்.
அதனையடுத்து அருகில் நின்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்காப்பு நடவடிக்கைக்காக வானத்தினை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட போதும், சாரதி உழவு இயந்திரத்தை நிறுத்ததாது தொடர்ந்தும் பயணித்ததால், உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டோம். அதன் போது இளைஞனும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதால் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
சான்று பொருளாக உழவு இயந்திரத்தை மீட்டு பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளோம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம் என்றனர்.





 
  
