துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைக்காவலர், பல்லேகம சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம்
சிறைக்காவலர்கள், கைதிகள் எனப் பலர் தொடர்ச்சியாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது, நிலைமையை கட்டுப்படுத் துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைக்காவலர், விசாரணைகளுக்காக பல்லேகம சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்த 10 சிறைக்காவலர்கள், 21 கைதிகள் என 31 பேர் உயிரிழந்தனர். அத்தோடு சிறைக்காவலர்கள், கைதிகள் எனப் பலர் தொடர்ச்சியாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், 6 ஆம் திகதியன்று ஏற்பட்ட கலவரத்தின்போது கைதிகள் பிரதான நுழைவாயிலை சேதப்படுத்திய போது, அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை காவலர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பல்லேகம சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் நிமித்தம் குறித்த உத்தியோகத்தருக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மோதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, கைதிகள் இணைந்து சிறைக்காவலர்களின் உயிரைப் பறிக்கும் வகையில் கடுமையாக தாக்கியபோது, நிலைமையை கட்டுப்படுத்தவும் சிறைக்காவலர்களின் உயிரைக் காப்பாற்றவும் குறித்த சிறைக்காவலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மேற்படி உத்தியோகத்தர் சிறைச்சாலைகள் சட்ட விதிமுறைகளுக்கமைய துப்பாக்கியைப் பயன்படுத்தினாரா என்பதையும், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குள் செயற்பட்டாரா என்பதையும் கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.





