68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
நுளம்பு பெருக்கத்தை கருத்தில் கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி உயர் அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 47 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிலவிவந்த தொடர்ச்சியான மழையுடன் கூடிய கால நிலை காரணமாக நாடளாவி ரீதியில் நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதோடு, இதன் விளைவாக நாட்டில் தினந்தோறும் அடையாளம் காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துச் செல்வதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எதிர்வு கூறியுள்ளது.
அதற்கமைய ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியினுள் நாடுதழுவிய ரீதியில் 68 ஆயிரத்து 71 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக இம்மாதத்தில் மாத்திரம் 12,692 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நுளம்பு பெருக்கத்தை கருத்தில் கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி உயர் அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 47 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கண்டறியப்பட்ட நோயாளர்களில் 52.63 சதவீதமானோர் அதாவது 35,823 பேர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அத்தோடு கம்பஹா மவட்டத்திலேயே (13976) அதிகூடிய எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, கொழும்பு (13706) , மாத்தறை (4834) , களுத்துறை (4548) , கண்டி (4428) ,இரத்தினபுரி (3937), காலி (3910) மற்றும் அம்பாந்தோட்டை (1913) ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பைக்காணக் கூடியதாக உள்ளது.
ஆகையால் பொதுமக்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுக்கு தமது சுற்றுப்புறச் சூழலைத் துப்புரவு படுத்தி, நீர் தேங்கக்கூடிய இடங்களை இல்லாமல் ஒழித்துத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





