குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை: அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை
குறிப்பாக இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களையும் தமிழர்களையும் இலக்குவைத்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த ஆண்டு பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதிவானதாகவும், இருப்பினும் அம்மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை அடையாளங்கண்டு, அவர்களைத் தண்டிப்பதை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டதாகவும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வருடாந்தம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாட்டினதும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் பரந்துபட்ட தகவல்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கை வெளியிடப்படும். அதன்படி 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் பற்றி இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு:
பயங்கரவாத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் பலர் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டனர். அதேபோன்று பால்புதுமையின சமூகத்தினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் திருநங்கைகள், திருநம்பிகளைக் கைதுசெய்வதை நிறுத்துதல் என்பன தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தினால் உரியவாறான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டன.
அதேவேளை தன்னிச்சையான மற்றும் சட்டவிரோத படுகொலைகள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல், அரசாங்கத்தினால் முறையற்ற, மனிதாபிமானமற்ற வகையிலான தண்டனைகள் வழங்கப்படல், பொருத்தமற்றதும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதுமான சிறைச்சாலை நிலைவரம், தன்னிச்சையான கைது மற்றும் தடுத்துவைப்பு, நீதிமன்ற சுயாதீனத்துவம் தொடர்பான சந்தேகங்கள், நபர்களின் தனியுரிமை மீதான அநாவசிய தலையீடுகள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் மீதான முடக்கம், ஊடக சுதந்திரத்தின் மீதான மட்டுப்பாடுகள், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தின் மீதான தடைகள், சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளன.
குறிப்பாக இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களையும் தமிழர்களையும் இலக்குவைத்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை அடையாளங்கண்டு, அவர்களைத் தண்டிப்பதில் அரசாங்கத்தினால் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.