சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி: சட்டமா அதிபரின் ஆலோசனைப்படியே அடுத்தகட்ட நடவடிக்கை
இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஊடக 09.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தார்.
மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ சத்தியக்கடதாசி ஊடாக வெளிப்படுத்தியிருக்கும் விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவேண்டியிருப்பதாகவும், எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தமது அலுவலகத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஊடக 09.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் இழைத்த குற்றங்கள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், மனிதப்புதைகுழிகள் மற்றும் அவற்றுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் உள்ளிட்ட சகல உண்மைகளையும் வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷ அறிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி இந்த உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக சத்தியக்கடதாசி வழங்குவதற்கும் அவர் இணங்கியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் தொடர்புடைய சில உண்மைகளையும், எதிர்வருங்காலங்களில் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராக உள்ள விடயங்களையும் உள்ளடக்கி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி சிறைச்சாலையில் சோமரத்ன ராஜபக்ஷ தனது சட்டத்தரணி முன்னிலையில் சத்தியக்கடதாசி வழங்கியிருந்தார்.
அந்த சத்தியக்கடதாசியின் ஒரு பிரதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் மேலும் இரு பிரதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடமும், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடமும் கையளிக்கப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில் சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசியை அடிப்படையாகக்கொண்டு முன்னெக்கப்படவுள்ள அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் வினவியபோதே மகேஷ் கட்டுலந்த மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அதன்படி ஏற்கனவே தமது அலுவலக அதிகாரிகள் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்தமையை நினைவுகூர்ந்த அவர், தற்போது அவர் அவரது சட்டத்தரணி ஊடாக அனுப்பிவைத்திருக்கும் சத்தியக்கடதாசி தமக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.
இருப்பினும் மரண தண்டனை கைதியான சோமரத்ன ரஜபக்ஷ இப்போது வெளிப்படுத்தியிருக்கும் விடயங்களை கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற வேளையிலேயே கூறியிருக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய மகேஷ் கட்டுலந்த, அவ்வாறிருக்கையில் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதி ஒருவர் தற்போது கூறும் விடயங்களை வைத்து தாமாக விசாரணைகளை மேற்கொள்ளமுடியாது என்று விளக்கமளித்தார்.
அதேவேளை இதுகுறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தமது அலுவலகத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டு, சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுவது பற்றித் தீர்மானிக்கப்படும் என்றார்.





