தவறான தகவல்களைப் பயன்படுத்தி சஹஸ்தனவி மின்திட்ட அனுமதி: எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டு
தவறான தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டபோது, அமைச்சரவையில் இருந்த ஏனைய அமைச்சர்கள் இது குறித்து அறியாமல் இருந்தார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தவறான தரவுகளின் அடிப்படையில் சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலைய மோசடி தொடர்பாக விசேட கூற்றொன்றை முன்வைத்து 04-08-2025 அன்று வெளிக்கொணர்ந்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சஹஸ்தனவி திரவப்படுத்தப்பட்ட இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு அரசாங்கம் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தரவுகளில் தவறான விபரங்கள் காணப்படுகின்றன. இந்தப் பத்திரத்தின் படி, ஒரு அலகு மின்சாரத்தின் விலை ரூ.20.15 ஆகும். இந்தக் கணக்கீடு, ஒரு லீற்றர் டீசலின் விலை ரூ.110 ஆகவும், ரூபாவின் மாற்று விகிதம் ரூ.195 ஆகவும் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டபோது, ஒரு லீற்றர் டீசலின் விலை ரூ.286 ஆகவும், ஒரு டொலரின் மாற்று விகிதம் ரூ.300 ஆகவும் இருந்தன. தவறான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்து, சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுமதி பெறப்பட்டு, நாட்டிற்கும் நுகர்வோருக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இது மிகவும் ஊழல் நிறைந்த செயல்முறை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்தப் பிழை குறித்து, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் தெரிவித்துள்ளது. ஒரு அலகு மின்சாரத்தின் விலை மூன்று சந்தர்ப்பங்களில் ரூ.35.81, ரூ.43.25, மற்றும் ரூ.72.11 ஆக இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கு கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால், விலை அலகுகளுக்கும் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தரவுகளுக்கும் இடையிலான தவறுகள் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், 2025 மார்ச் இறுதியில் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
தவறான தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டபோது, அமைச்சரவையில் இருந்த ஏனைய அமைச்சர்கள் இது குறித்து அறியாமல் இருந்தார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எனவே, இந்த அமைச்சரவைப் பத்திரம் தவறான தகவல்களையும் தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இந்தத் தவறைச் சுட்டிக்காட்டியபோதிலும், அதனைக் கருத்தில் கொள்ளாமல், அவர்கள் விரும்பியவாறு செயற்பட்டு, நாட்டிற்கும் நுகர்வோருக்கும் கடுமையான இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி, மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தரப்புகளுடன் கலந்துரையாடி, இந்தத் தவறினால் நாட்டிற்கு ஏற்படும் இழப்பைத் தடுக்க, ஜனநாயக ரீதியில் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மின்சார சபையின் தலைவரும், LDL நிறுவனத்தின் தலைவரும் ஒரே நபராக இருப்பதால், இங்கு நலன்கள் முரண்பாடு காணப்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கும்போது, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறாகும். எனவே, இப்போதாவது இது குறித்து மறு பரிசீலனை செய்து, சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத் திட்டத்திற்குப் பதிலாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.