இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டைத்திட்டம் தயாராகவுள்ளது - இந்திய உயர்ஸ்தானிகர்
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் சிறந்த திறமையாளர்கள் இருக்கின்றனர்.
இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்படத் தயாராக உள்ளதாகவும், உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு முன்னர் இன்னும் சில சிறிய நடைமுறைகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பினால் நேற்று கொழும்பு சிற்றி ஒப் ட்ரீம்ஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'திஷா வழிகாட்டல் திட்டம் 2026' ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், ஒவ்வொரு குடிமகனுக்கும் சரிபார்க்கப்பட்ட, நம்பகமான டிஜிட்டல் அடையாளம் கிடைக்கும் போது, நாட்டின் அடிப்படை அமைப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
சமூக உள்ளடக்கம் என்பது வெறும் கொள்கை இலக்காக மட்டும் நின்றுவிடாமல், அது நடைமுறை யதார்த்தமாக மாறும். இலங்கையின் புத்தாக்கப் பொருளாதாரத்திற்கு இதுவே அடித்தளமாக அமையப் போகிறது. இதன் மூலமே நிதியியல் தொழில்நுட்பம், மின்-வணிகம் மற்றும் டிஜிட்டல் அரச சேவைகளை சாத்தியமாக்க முடியும்.
இத்திட்டத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொன்கின்றேன்.
செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியமாகும். இந்தத் தொழில்நுட்பம் மிக வேகமாக வணிகங்களை மாற்றியமைத்து வருவதோடு சிறிய குழுக்கள் கூட பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆற்றலை வழங்குகின்றது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதால், எந்தவொரு நாடோ அல்லது தனி நிறுவனமோ தனித்து இயங்க முடியாது. இதற்கு ஒரே தீர்வு, நாம் ஒருவருக்கொருவர் தொடர்ந்து பேசிக்கொள்வதும், எவை பலன் தருகின்றன, எவை பலன் தரவில்லை என்பதை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டு, இணைந்து கற்றுக்கொள்வதுமே ஆகும்.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் சிறந்த திறமையாளர்கள் இருக்கின்றனர். 'திஷா' போன்ற திட்டங்கள் இரு நாட்டு கண்டுபிடிப்பாளர்களும் தனித்தனியாக இயங்காமல் ஒன்றிணைந்து செயற்பட சிறந்ததொரு தளத்தை அமைத்துக் கொடுக்கவுள்ளது.
இந்தியாவின் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கைக்கும் இடையே கூட்டாண்மையானது வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளிப் பேரழிவுக்குப் பின்னரான நிச்சயமற்ற நிலைக்கு மத்தியிலும், அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் நம்பியார் தலைமையிலான தூதுக்குழு கொழும்புக்கு விஜயம் செய்திருந்தனர். இது இலங்கைக்கு உதவும் இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது என்றார்.





