அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மக்கள் போராட்ட இயக்கம் பாரிய ஆர்ப்பாட்டம்
தற்போதைய உலக அரசியல் சூழலில், வல்லரசு நாடுகளின் இராணுவத் தேவைகளுக்காக இலங்கை பலிகடா ஆக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் யுத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் மேற்கொண்டுள்ள இராணுவ ஒப்பந்தங்களை உடனடியாக இரத்துச் செய்யக் கோரியும் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் போராட்ட இயக்கத்தினால் 05-04-2026 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்க - இஸ்ரேலிய யுத்த வெறியைத் தோற்கடிப்போம், ஆக்கிரமிப்புகளை நிறுத்து மற்றும் அமெரிக்க - இலங்கை இராணுவ ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து இராணுவ உடன்படிக்கைகளையும் இரத்துச் செய் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
குறிப்பாக, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டுள்ள பல்வேறு பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒப்பந்தங்களில் இருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
தற்போதைய உலக அரசியல் சூழலில், வல்லரசு நாடுகளின் இராணுவத் தேவைகளுக்காக இலங்கை பலிகடா ஆக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தத் தர்மச்சக்கரம் மற்றும் எதிர்ப்புப் போராட்டத்தில் வெயகந்தவல ராகுல தேரர், முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான நுவன் போபகே, வசந்த முதலிகே உள்ளிட்ட முக்கிய அரசியல் செயற்பாட்டாளர்கள் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வல்லரசுகளின் இராணுவக் கூட்டணிகளுக்குள் இலங்கை சிக்கிக்கொள்வது நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், குறிப்பாக அமெரிக்காவுடனான இராணுவ உடன்படிக்கைகள் நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தூதரகத்திற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி பொம்மைகளை எறிந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டதோடு, ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு துணை போக வேண்டாம் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.





