காற்றாலை திட்டம் நிறுத்தப்படாவிட்டால் மக்கள் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார்கள்: செல்வம் அடைக்கலநாதன்
ஜனாதிபதி மக்களை நேசிக்கின்றார் என்றால் பொருளாதார மேம்பாட்டை செய்ய வேண்டுமாக இருந்தால் இவ்வாறான திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அந்தத் திட்டம் தொடர்பான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அறிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது.இந்தத் திட்டம் நிறுத்தப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தியாகம் செய்யவும் தயங்கமாட்டார்கள் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 24-09-2025 நடைபெற்ற தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மன்னாரின் காற்றாலை மின்சாரம் தொடர்பில் மன்னாரிலும் கொழும்பிலும் தொடர்ச்சியாக மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி தனது கடிதத்தில் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உபகரண செயற்பாடுகளை முன்னெடுக்க ஆணையை வழங்கியுள்ளார். உண்மையில் மன்னார் மக்களின் போராட்டம் பொய்திருக்கின்றதா? அந்த மக்களின் வாழ்வு உரிமை மறுக்கப்பட்டுள்ளதா? மன்னார் மக்களின் வாழ்வுரிமை பொய்யாக்கப்பட்டுள்ளதா? என்பதை இந்த சபையில் கேள்வியெழுப்பிகின்றேன்.
போராட்ட இயக்கமொன்றின் பின்னணியை கொண்டுள்ள ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்துள்ளார். அவர் எங்கள் மக்கள் வாழ முடியாது என்று கூறும் சூழலை உருவாக்கும் காற்றாலை மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறுவது எங்களின் மக்களின் உயிரை துச்சமாக மதிக்கும் செயற்பாடாகவே இருக்கும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மன்னார் நகர் தொடர்பான பல விடயங்களை ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறினாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் அது நடைமுறைப்படுத்தப்படும் என்று இலகுவாக கூறியுள்ளார். எவ்வாறாயினும் எங்களின் போராட்டம் தொடரும். அது இன்னும் வலுவடையும். மக்கள் வெள்ளமாக மாறும். மக்களின் உயிரை காவு கொள்ளும் இந்த மின்சார உற்பத்திக்கு எதிராக நாங்கள் இறந்தாலும் அடுத்த சந்ததி காப்பாற்றப்பட வேண்டும் என்று அகிம்சை வழியில் போராடும் மக்கள் இந்த போராட்டம் பொய்யாக்கூடாது என்பதற்கு பல தியாகங்களை செய்ய தயாராக இருக்கின்றனர் என்பதனை இந்த சபையில் கூறிக்கொள்கின்றேன்.
இதேவேளை ஜனாதிபதி மக்களை நேசிக்கின்றார் என்றால் பொருளாதார மேம்பாட்டை செய்ய வேண்டுமாக இருந்தால் இவ்வாறான திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் ஜனாதிபதி சிந்திக்க வேண்டும். மக்களின் விடுதலைக்காக போராடியவர் என்ற வகையில் எங்களின் மக்களின் உயிரை காப்பாற்றும் செயற்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக காற்றாலை மின்சார உற்பத்தியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோருகின்றோம்.
மக்களின் போராட்டத்தை,மக்களின் ஆணையை, மக்களின் அகிம்சை போராட்டத்தை திசை திருப்பும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் மக்கள் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதை எச்சரிக்கையாக கூறுகின்றேன் என்றார்.