சீன மக்கள் அரசியல் ஆலோசனைக் குழுவின் (CPPCC) தேசியக் குழுத் தலைவரை சந்தித்தார் பிரதமர்
நீண்டகாலமாக நிலைத்துவரும் இலங்கை-சீனா நட்புறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாசாரம், கல்வி மற்றும் மக்கள் ஈடுபாடு உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னேற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 13-10-2025 ஆம் திகதி பீஜிங்கில், சீன மக்கள் அரசியல் ஆலோசனைக் குழுவின் தேசியக் குழுத் தலைவர் (CPPCC), மேதகு வாங் ஹூனிங் (Wang Huning) சந்தித்தார்.
பெண்கள் பற்றிய உலகத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தமைக்காகப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, தமது தூதுக்குழுவுக்கு வழங்கப்பட்ட சிறப்பான விருந்துபசாரத்திற்கும் நன்றியைத் தெரிவித்தார்.
மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டதன் 76வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் கடந்த பல தசாப்தங்களாக சீனா அடைந்துவரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றை பாராட்டினார்.
இச்சந்திப்பின்போது, நீண்டகாலமாக நிலைத்துவரும் இலங்கை-சீனா நட்புறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாசாரம், கல்வி மற்றும் மக்கள் ஈடுபாடு உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னேற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே 1952 ஆம் ஆண்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அரிசி - இறப்பர் ஒப்பந்தத்தை (CRI) நினைவு கூர்ந்த பிரதமர் அமரசூரிய, காலம் காலமாகக் கட்டி எழுப்பப்பட்டு வரும் பரஸ்பர நம்பிக்கை, பகிர்ந்துகொள்ளப்படும் அபிவிருத்தியின் பலன்கள் ஆகியன மூலம் இந்த மரபை மேலும் பலப்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
அத்துடன், இரு நாடுகளின் தலைவர்களாலும் வெளியிடப்பட்ட அரச விஜயத்தின் பலன்களையும், கூட்டு அறிக்கையையும் நினைவுகூர்ந்த இரு தரப்பினரும், பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இலங்கை - சீன மூலோபாயக் கூட்டுறவை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்குத் தமது உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்தனர்.