9 மாகாணங்களிலும் கலந்துரையாடல்: பிரதமர் ஹரிணி அறிவிப்பு
பாராளுமன்றத்தில் 24-07-2025 அன்றுநடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல 9 மாகாணங்களுக்கும் சென்று கலந்தரையாடல்களை மேற்கொள்வோம். அதேநேரம் இதற்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரின் பூரண ஒத்துழைப்பும் அவசியமாகும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 24-07-2025 அன்றுநடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உத்தேச கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உரிமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஆனால் இது தேசிய மக்கள் சக்தி முன்வைத்த யோசனைகள் அல்ல என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இது உலக மாற்றத்திற்கமைய ஒவ்வொரு காலத்தில் கலந்துரையாடப்பட்டு உருவானது. இதனால் எவருக்கும் தனிப்பட்ட உரிமை கிடையாது. இப்போது ஏற்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்புடன் பலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். தற்போதைய கல்வி முறையில் பல்வேறு குறைபாடுகளும் பிரச்சினைகளும் உள்ளன. பாடசாலைகள் தொடர்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இடைவிலகும் பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இப்போது எங்கே இருக்கின்றனர். இவர்களில் எத்தனை பேர் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர். எத்தனை பேர் குறைந்த சம்பளத்தில் இருக்கின்றனர் என்று ஆராய வேண்டும். எம்மிடம் இருந்து கிடைக்க வேண்டிய கல்வி அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதேபோன்று தொடர்ச்சியாக பாடசாலைகளுக்கு வராத பிள்ளைகளும் உள்ளன. இதனால் எமக்கு இப்போதும் எஞ்சியுள்ள பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கே நாங்கள் முயற்சிக்கின்றோம்.
இந்த கல்வி மறுசீரமைப்பு பாடங்களுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. பரந்தளவான மறுசீரமைப்பாகும். கல்வி மறுசீரமைப்புக்கு பாடங்களை மட்டும் மாற்றி பயனில்லை. அதற்கும் அப்பாலான விடயங்கள் உள்ளன. இதன்படி பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதுடன், தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை அபிவிருத்தி திட்டங்கள், டிஜிட்டல் கல்விக்கான வசதிகள், மனித வளங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.
இதேவேளை எமக்கு இது தொடர்பில் மக்கள் ஆதரவு பெற்றோரின் பங்களிப்பு, ஆசிரியர்களின் பங்களிப்பு என்பன அவசியமாகும். கட்டமைப்பொன்றை மாற்றியமைக்கும் போது அது தொடர்பில் ஆராய வேண்டும். இதற்காக காலம் அவசியமாகும். 2026ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கும் 6ஆம் தரத்திற்குமே இதனை ஆரம்பிக்கவுள்ளோம். இதனுடன் பயணத்தை ஆரம்பிப்போம் சாதாரண தரத்திற்கான மாற்றத்திற்கு 3 வருடங்கள் காலம் உள்ளது. சகலரின் ஆலோசனைகளையும் பெற்று நாங்கள் இந்த பயணத்தை செய்வோம் என்றார்/