மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை அரசாங்கம் மறைத்துள்ளது - சம்பிக்க
திருடர்களை பிடிப்பதாக இருந்தால், நாட்டை வங்குராேத்தாக்கிய நிலையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சி தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை அரசாங்கம் மறைத்துள்ளதன் மூலம் இது அரசியலமைப்பை மீறுவதுடன் நாட்டின் கலாசாரத்தின் மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாரிய அடியாகும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக தெரிவித்தார்.
அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் சம்பந்தமாக எடுக்கவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி 11-08-2026 அன்று பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் கூடி ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயேஇவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் அங்கு மேலும் குறி்ப்பிடுகையில், நீதிபதிகளின் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தங்களது நிலைப்பாட்டை குறிப்பிட்டு, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அதனை மகாநாயக்க தேரர்கள் எங்களிடம் உறுதியளித்திருந்தார்கள். இவ்வாறான நிலையில் மகாநாயக்க தேரர்களின் கடிதம் கிடைக்கவில்லை என அரசாங்கத்தில் இருப்பவர்கள் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்றாலும் அனைத்து விடயங்களையும் மறைப்பது இந்த அரசாங்கத்தின் இயல்பாகும். எந்த விடயமும் வெளிப்படையாக இல்லை. நிலக்கரி மோசடி, கொள்கலன்கள் 323 விடுவிக்கப்பட்டமை, திறைசேரியின் 2,5 மில்லியன் டொலர் காணாமல் போனமை போன்ற அனைத்தையும் அரசாங்கம் மறைத்து வருகிறது.
என்றாலும் பெளத்த சாசனத்தை பாதுகாப்பது,அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாட்டின் அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையில் அது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறான நிலையில் நாட்டில் இருக்கும் மகாநாயக்க தேரர்கள் ஒருமித்து, ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை மறைப்பது என்பது அரசியலமைப்பை மீறுவது மாத்திரமல்ல, இந்த நாட்டின் கலாசாரத்துக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாரிய அடியாகும். வேறு மத தலைவர்கள் இவ்வாறு கடிதம் அனுப்பி இருந்தால், ஜனாதிபதி அநுரகுமார அதனை இவ்வாறு மறைத்திருக்கமாட்டார். பகிரங்கப்படுத்தியிருப்பார் என்றே நினைக்கிறேன்.
அதேநேரம் சட்டத்துக்கு மேலால் யாரும் இல்லை என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். ஆனால் சட்டத்துக்கு மேலால் மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே இருக்கிறது. அவர்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு மாத்திரமே சட்டம் நிலைநாட்டப்படுகிறது அதனால் இங்கு அரசியல் வழிவாகும் நடவடிக்கை இடம்பெறுகிறதே தவிர திருடர்களை பிடிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதில்லை. திருடர்களை பிடிப்பதாக இருந்தால், நாட்டை வங்குராேத்தாக்கிய நிலையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
அதேநேரம் மக்கள் தங்களுடன் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வருகிறது. மக்கள் அரசாங்கத்துடன் இருந்தால், இவர்களுக்கு மாகாணசபை தேர்தலை நடத்தலாம். ஆனால் மக்கள் அரசாங்கத்துடன் இல்லை. அந்த பயம் காரணமாகவே மாகாணசபை தேர்தலை அரசாங்கம் நடத்தாமல் இருக்கிறது என்றார்.





