கனடா பிரதமருக்கு யூடியூபில் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
இச்சம்பவம் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு யூடியூப் காணொளி ஊடாக கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கல்கரியைச் சேர்ந்த நபர் தொடர்ந்து காவலில் வைக்கப்படவுள்ளார். 31 வயதான ஜேமி டா கோஸ்டா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
டா கோஸ்டா தற்போது கல்கரி தடுப்புக் காவல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
கனடிய குற்றவியல் சட்டத்தின் 264.1(1)(a) பிரிவுக்கு அமைவாக, "கனடா பிரதமர் மார்க் கார்னியை கொலை செய்யும் வகையில் மிரட்டல் விடுத்தமை" தொடர்பில் டா கோஸ்டா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜூலை 28 அன்று, யூடியூப் கணக்கு ஒன்றில் பிரதமர் மார்க் கார்னியைக் கொலை செய்வதற்கான மிரட்டல்கள் பதிவிடப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்ததாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
கனடிய தலைவருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுமாறும் ஒட்டாவாவிற்குப் பயணம் செய்யுமாறும் தூண்டும் வகையிலான காணொளி ஒன்று ஜேமி டா கோஸ்டாவின் பெயரிலுள்ள யூடியூப் பக்கத்தில் இன்னமும் உள்ளது.
இதில் பிரதமரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் கார்னி தொடர்பான வழக்கு தவிர, டா கோஸ்டா மேலும் பல குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளார்.





