யோசித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு
பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் பூரண விசாரணைகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்கு சொந்தமான தனியார வங்கி கணக்கொன்றில் 17 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பான வழக்கை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைத்து ஹோமாகம மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வழக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க முன்னிலையில் விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் பூரண விசாரணைகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. வழக்கு விசாரணையின் போது பிரதிவாதியான யோசித ராஜபக்ஷ திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததோடு, அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் முன்னிலையாகியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான தனியார் வங்கிக் கணக்கில் 17 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டமை தொடர்பாகப் பணச் சுத்தழகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டு, கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
அதன்போது பிரதிவாதியான யோசித ராஜபக்ஷவை தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு ரொக்கப் பிணைகளிலும், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க உத்தரவிட்டிருந்தார். அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்த நீதிபதி, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





