இந்தியாவுக்கு விதித்துள்ள தீர்வை வரியால் பாதிப்பு: ரவி கருணாநாயக்க
சுங்க சேவைகளை இந்தியாவின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவ்வாறில்லை எனில் சுங்கத்தால் கிடைக்கக் கூடிய வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்படும்.
அமெரிக்கா இந்தியாவுக்கு விதித்துள்ள தீர்வை வரி அந்நாட்டு ஏற்றுமதி பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எவ்வாறிருப்பினும் இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை மீறி செயற்படுவதை விட இந்தியாவுடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது எமது அபிவிருத்திக்கு சிறந்ததாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் 03-09-2025 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமெரிக்கா இந்தியாவுக்கு விதித்துள்ள தீர்வை வரி அந்நாட்டு ஏற்றுமதி பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அது இலங்கையிலும் மறைமுக தாக்கத்தை செலுத்தும். எனவே இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்திடம் இதற்கான திட்டமிடல்கள் இல்லை.
தற்போது இலங்கை மின்சாரசபை பங்குகளாகப் பிரிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. எந்த அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பது யாருக்கும் தெரியாது. எந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை பாவனையாளர்களை பாதுகாப்பவையாக இருக்க வேண்டும். அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனம் என்பதற்காக எதேச்சதிகாரமாக தீர்மானங்களை எடுத்து, ஆசியாவில் அதிக மின்கட்டணம் அறவிடப்படும் நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டால் போட்டி நிலைமை அற்றுப் போகும்.
அவ்வாறு போட்டி நிலைமை இல்லாது போகும் பட்சத்தில் அது ஏற்றுமதித்துறையையும் பாதிக்கும். எனவே இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். மறுபுறம் சுங்க சேவைகள் நவீனமயப்படுத்தப்பட வேண்டும். சுங்க சேவைகளை இந்தியாவின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவ்வாறில்லை எனில் சுங்கத்தால் கிடைக்கக் கூடிய வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்படும்.
இங்கு இந்தியாவை மீறி வர்த்தகத்தில் ஈடுபடுவதை விட, இந்தியாவுடன் இணைந்து வர்த்தகத்தை முன்னெடுப்பதே சிறந்ததாகும். உலகிலேயே நான்காவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா அபிவிருத்தியடைந்துள்ளது. எனவே இந்தியாவுடன் இணைந்து பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றால் அது எமது அபிவிருத்தியில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றார்.





