தாஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பம்: அமைச்சர் நளிந்த
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடுவதற்காக வசீம் தாஜுனின் கொலை சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.
போதைப்பொருள் கொள்கலன்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணையில் பொதுஜனபெரமுவின் முன்னாள் உறுப்பினரான சம்பத் மனம்பேரி விளக்கமறியல்ல வைக்கப்பட்டுள்ள நிலையில் றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வைத்தியர்நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைக் கொண்ட இராசயணக் கொள்கலன்கள் இரண்டு நிலத்துக்குள் புதைக்கப்பட்ட விடயத்தில் சம்பத்மனம்பேரி கைது செய்யப்பட்டு 90நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த விசாரணைகளின் அடிப்படையில் தான் வசீம் தாஜுதீனின் கொலை சம்பந்தமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள. அதனடிப்படையில் குறித்த கொலை சம்பந்தமாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடுவதற்காக வசீம் தாஜுனின் கொலை சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. கொலை சம்பந்தமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதன்பின்னர் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். கொலையுடன் தொடர்புடையவர்களுக்கே தற்போது அதன் உண்மை தெரியும்.
மேலும் சம்பத்மனம்பேரியிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவர் வாய்திறக்க ஆரம்பித்திருக்கின்றார். ஆகவே விசாரணை அதிகாரிகள் தங்களுடைய முழுமையான விசாரணைகளை நிறைவு செய்யததன் பின்னர் உரிய நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் அதற்கும் ஆளும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பில்லை. நாங்கள் கடந்த அரசியல் வாதிகள் போன்று விசாரணைகளில் தலையீடுகளைச் செய்வதில்லை என்றார்.





