600 கோடி ரூபா நட்டத்தை ஈடுகட்டவே மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி: எஸ்.எம். மரிக்கார் எம்.பி.
நஷ்டத்தை ஈடுசெய்வதற்காகவே இலங்கை மின்சாரசபை 13 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை முன்மொழிந்துள்ளது.
அரசாங்கத்தின் நிலக்கரி கொள்வனவில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது. இதனால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள 7,600 கோடி ரூபா நஷ்டத்தை ஈடுகட்டவே மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சுமத்தினார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 22-02-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அரசாங்கத்தில் எவ்வித ஊழல், மோசடியும் இடம்பெறவில்லை எனக் கூறிக் கொண்டிருந்தாலும், தேசிய மக்கள் சக்தியின் பின்வரிசை எம்.பி.க்கள் நிலக்கரி மோசடிக்கு துணைபோவதை நிறுத்தவில்லை. விலைமுறி கோரல் முதற்கொண்டு ஆரம்பத்திலிருந்தே இதில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. விலைமுறி கோரலுக்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கப்பல்களும் தாமதமாகவே வருகின்றன. கப்பல்கள் தாமதமாக வருவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் உரிய தரப்ப்பினரால் எடுக்கப்படவில்லை. இதுவரை வருகை தந்துள்ள 8 கப்பல்களிலுமுள்ள நிலக்கரிகளும் தரத்தில் குறைவானவை என இலங்கை மின்சாரசபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 7,600 கோடி ரூபா இதனால் எமது நாட்டுக்கு நட்டமாகும்.
இந்த நஷ்டத்தை ஈடுசெய்வதற்காகவே இலங்கை மின்சாரசபை 13 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை முன்மொழிந்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளால் டீசல் மாபியாக்கள் மீண்டும் தலைதூக்கும். மின்சக்தி அமைச்சர் இந்த விடயத்தில் பாராளுமன்றத்தையும் ஏமாற்ற முயற்சிக்கின்றார். இந்த நிலக்கரி மோசடிக்கு அமைச்சர் நேரடியாக பொறுப்பு கூற வேண்டும். அவருக்கு இந்த அமைச்சு பதவியை வழங்கிய ஜனாதிபதியும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே மின்சார பிரச்சினை தொடர்பில் நாம் கூறினோம். அது தற்போது ஆரம்பித்துள்ளது. அதேபோன்று ஏப்ரல் மாதத்தின் பின்னர் எரிவாயு பிரச்சினை ஏற்படும். ஆனால் அதற்கு காரணமானவர்களும் இந்த அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுவர் என்றார்.





